ஆப்பம்
15 Mar,2019
உடல் எடையைக் குறைக்க உதவும் ஆப்பம்
இட்லி, இடியாப்பம் போல எளிதாக ஜீரணிக்கக் கூடிய நம்முடைய உணவு வகைகளில் ஆப்பத்துக்கும் முக்கிய இடமுண்டு. காலை, மாலை, இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற சரியான உணவு ஆப்பம். தற்போது, ஆப்பத்தில் பல வெரைட்டிகளைக் காட்டி வருகின்றன உணவகங்கள். வீட்டிலேயே ஆப்பம் செய்யலாம் என்றாலும், தோசை ஊற்றுவதைப்போல ஆப்பம் செய்வது அத்தனை எளிதல்ல. தோசையில் எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துவோம். ஆனால், ஆப்பத்திலோ அதற்கு அவசியமில்லை.
எப்படிச் செய்வது?
முதலில் ஆப்பத்துக்கான மாவு தயாரிக்கும் முறை.
தேவை:
பச்சரிசி - 1 கிலோ
தயிர் - 100 கிராம்
உப்பு - 30 கிராம்
முழு தேங்காய் - ஒன்று
சமையல் எண்ணெய் - 50 மில்லி
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி சுத்தம் செய்து, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை இறுத்து, ஒரு தட்டில் வைத்து மின்விசிறியின் கீழ் காயவிடுங்கள். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்து, சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளுங்கள். இனி, தேங்காயைத் துருவி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரே ஒரு முறை மட்டும் பால் எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பாலை அரைத்த மாவுடன் சேர்த்துக் கலந்து, கூடவே ஒரு கப் தயிரையும் சேர்த்து, கரண்டியால் நன்கு கலந்து, இறுதியாக உப்புச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். முதல் நாள் மாலையில் இதைத் தயாரித்து ஒரு சட்டியில் வைத்து மூடி, மறுநாள் எடுத்து உபயோகிக்க வேண்டும்.
அடுப்பில் ஆப்பச் சட்டியை வைத்து சூடானதும், துளி எண்ணெய்விட்டு, துணி கொண்டு சட்டி முழுவதும் எண்ணெயைப் பரப்பிவிட வேண்டும். பிறகு, முதல்நாள் தயாரித்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை ஒரு சுழற்று சுழற்றினால்... எல்லா பக்கத்திலும் மாவு உருண்டு ஓடி நிற்கும். ஒரு தட்டைக்கொண்டு சட்டியை மூடி, மிதமான தீயில் வைத்து நான்கு நிமிடங்கள் கழித்துத் திறந்தால், ஆப்பம் வெந்திருக்கும். அப்படியே எடுத்து விரும்பிய சைடிஷைத் தொட்டுச் சாப்பிடலாம்.
என்ன நன்மை?
பெரும்பாலோர் தேங்காய்ப் பாலை மாவில் சேர்க்காமல் ஆப்பம் செய்வார்கள். தேங்காய்ப் பாலைத் தனியாகத் தயாரித்து ஆப்பத்துடன் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், மேற்படி முறையில் ஆப்பத்தைத் தயாரிக்கும்போது கூடுதல் சுவையுடன், உடலுக்கும் பலம் சேர்க்கும்.
தேங்காயில் 61 சதவிகிதம் நீரில் கரையாத நார்ச்சத்து உள்ளது. அதனால் தேங்காய் கலந்த உணவுகளைச் சாப்பிட்டால் விரைவாகப் பசிக்காது. இது சற்று தாமதமாகவே சர்க்கரையாக மாற்றப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களும் ஓரளவு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடலில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் தன்மை தேங்காய்க்கு இருக்கிறது.