கருஞ்சிறுத்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்ற பெண்ணை சிறுத்தை தாக்கியுள்ளது.
11 Mar,2019
இளைஞர்கள் மத்தியில் மையம் கொண்டுள்ள செல்பி மோகம் அவர்களுடைய உயிருக்கே பல நேரங்களில் உலை வைக்கிறது. இது தெரிந்தும் செல்பியால் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது அமெரிக்காவில் பெண் ஒருவர் கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்று கையில் காயத்தை வாங்கியுள்ளார். அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வந்தார்.
அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ படம் எடுப்பதற்காக பார்வையாளர்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பையும் தாண்டி கூண்டு அருகே சென்றார். பின்னர் அவர் கூண்டை உரசியபடி நின்று கருஞ்சிறுத்தையுடன் தனது செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்தார். அப்போது சிறுத்தை திடீரென அந்த பெண்ணை தாக்கியது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.
இதுபோன்ற மூளையில்லாதவர்களால் விலங்குகளுக்கு எதுவும் நேரிட்டுவிடக்கூடாது என ஒருதரப்பும், தடுப்பை தாண்டி ஏன் சென்றார் என்று ஒரு தரப்பும் தங்களுடைய கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றன.