ஆட்டுக்கறி
கடைக்குப் போய் ஆட்டுக்கறி வாங்கறது பிரச்சினையில்ல. நல்லதா பார்த்து வாங்கணும். அது தெரியாமலே நம்மில் பல பேரும் கடையில் போய் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். எப்படித்தான் மட்டனை நல்லதா பார்த்து வாங்கறது என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். இதுக்குப்பிறகாவது நாளைக்கு கடைக்கு போய் கடைக்காரரும் வீட்டிலும் மிரண்டு போகிற அளவுக்கு சூப்பரா மட்டன் வாங்கிட்டு வாங்க. இதோ உங்களுக்கு சூப்பர் டிப்ஸ்கள்.
தொடைக்கறி
பொதுவாக மட்டன் வாங்குகின்ற பொழுது, தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பகுதியைக் கேட்டு வாங்குவோம். ஆனால் தொடைப் பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும் சாப்பிடச் சற்று கடினமானதாக இருக்கும். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக ஆடு நடக்கின்ற பொழுது, அதிகமாக அசைகின்ற தசைகள் கொஞ்சம்” கடினமானதாக இருக்கும்.
நெஞ்சுப்பகுதி
அதனால் தான் எப்போதும் மட்டன் வாங்குகின்ற பொழுது நெஞ்சுப் பகுதி மற்றும் நெஞ்சுக்குப் பின்புறம் உள்ள முதுகுத் தசைப்பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.
ரத்தம் தேங்குதல்
இறைச்சி பழையதா? அல்லது ஆரோக்கியமான ஆடா என்பதையெல்லாம் வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆம். நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போது உடலில் ரத்தம் எங்கும் தங்காமல் வடிந்துவிடும். எங்கும் தேங்கியிருக்காது. இதுவே ஏதேனும் நோய்வாய்ப்பட்ட ஆடாக இருந்தால் ஆங்காங்கே சிறிது சிறிது ரத்தம் தேங்கியிருக்கும். இதுவே ஆடு இறந்து போனபின் அறுத்ததாக இருந்தால் ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும்.
எது ருசி கிடாயா? பெட்டையா?
ஒரே பருவத்தில் உள்ள இரண்டு ஆடுகள் வெட்டப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் பெட்டை ஆட்டின் கறியைத் தேர்ந்தெடுங்கள். அதுதான் ருசி அதிகமாக இருக்கும். கோழியிலும் வெடைக் கோழி தானே ருசி அதிகம்.
வெள்ளாட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வெள்ளாட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வெள்ளாட்டில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும். மென்மையானதாகவும் இருக்கும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவைப் பார்ப்போம்.
ஈரப்பதம் (நீர்ச்சத்து) – 74.2 சதவீதம்
புரதச்சத்து – 21.4 சதவீதம்
கொழுப்பு – 3.6 சதவீதம்
தாது உப்புக்கள் – 1.1 சதவீதம்
மருத்துவ குணங்கள்
வெள்ளாட்டில் உள்ள ஒவ்வொரு பாகங்களுக்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு. அதேசமயம் வெள்ளாட்டின் பல உறுப்புக்கள் வாயுவை ஏற்படுத்தக்கூடியதும் அஜீரணம் உண்டாக்குவதாகவும் இருக்கிறது. அதனால் தான் இதில் சீரகம், மிளகு, சோம்பு போன்ற மூலிகை சார்ந்த மசாலாப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆட்டின் தலை
ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் தீரும்.
கழுத்துக்கறி
ஆட்டின் கழுத்துப் பகுதியில் உள்ள கறி மிகவும் மென்மையானதாகவும் சுவையாகவும் குறிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மென்று சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பகுதியில் கொழுப்பே இருக்காது.
ஆட்டு கண்
ஆட்டின் கண் பகுதியைப் பெரும்பாலும் யாரும் சாப்பிடுவதில்லை. தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் விவரம் தெரிந்தவர்கள் தேடி எடுத்து சாப்பிடுவார்கள். காரணம் ஆட்டின் கண் பகுதியைச் சாப்பிட்டால் நம்முடைய கண் பார்வை பலம் பெறும். நல்ல தெளிவான பார்வை கிடைக்கும்.
ஆட்டின் இதயம்
ஆட்டினுடைய இதயத்தை சாப்பிட்டால் நம்முடைய இதயம் பலம் பெறும். மன உறுதி அதிகமாகும். மன தைரியம் கூடும். உண்மையாதாங்க.
மார்புப்பகுதி
இதைத் தான் மட்டன் சாப்ஸ் என்று சொல்வார்கள். இது கபம் பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. கபத்தை அறுக்கும் ஆற்றல் உடையது. மார்புக்கு பலத்தைக் கொடுப்பதோடு ஏதேனும் மார்புப் பகுதிகளில் புண்கள் இருந்தால் வேகமாக ஆற்றக்கூடியது.
ஆட்டு நாக்கு
உடல் சூட்டால் அவதிப்படுகின்றவர்களுக்கு சிறந்த மருந்தாக இருப்பது ஆட்டினுடைய நாக்குப்பகுதி தான். அதோடு நம்முடைய சருமத்துக்கும் பளபளப்பை உண்டாக்கும்.
கொழுப்பு
பொதுவாக கொழுப்பு என்றால் சிலருக்கு கொள்ளைப் பிரியம். கொலஸ்ட்ரால் பயத்தால் சிலர் வெறுத்து ஒதுக்குவார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஆட்டினுடைய கொழுப்பானது இடுப்புப் பகுதிக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். உடம்பில் எத்தகைய வலி மற்றும் புண்ணையும் ஆற்றக்கூடிய குணம் கொண்டது.
அம்மை நோய், அக்கி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இந்த ஆட்டுக் கொழுப்பை சொல்லலாம்.
மூளை
ஆட்டின் மூளை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். ஆண்களுக்கு ஆண்மை விருத்திக்கும் தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும். புத்திக்கூர்மை பெறும். நினைவாற்றலை அதிகரிக்கும். மூளையை பலப்படுத்தும்.
நுரையீரல்
உடலுக்குக் குளிர்ச்சி தரும் நுரையீரலுக்கு பலத்தைக் கொடுக்கும். மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சினை இருக்கிறவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமையும்.
ஆட்டுக்கால்
ஆட்டுக்கால் சூப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? எலும்புக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நெஞ்சு சளியை வெளியேற்றும். கால்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
ஆட்டுக்குடல்
ஆட்டினுடைய குடல் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடிய ஆற்றல் கொண்டது. அல்சர் இருப்பவர்களுக்கு ஆட்டுக் குடலை விட சிறந்த மருந்து எதுவும் கிடையாது.
ஈரல் (கல்லீரல்)
ஆட்டினுடைய ஈரல் நம்முடைய ஈரலைப் பலப்படுத்தும். உடலின் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். ரத்த விருத்திக்கு ஆட்டினுடைய ஈரல் மிகச்சிறந்த மருந்து.