“இந்தக் கொலையை யாரோ செஞ்சமாதிரி செட் பண்ணினேன்”
14 Feb,2019
என்று கணவனைக் கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி ஒருவர் பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
செண்பகவள்ளி
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், வயது (50). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.
அவரின் மனைவி செண்பகவள்ளி (48) அகில இந்திய பெண்கள் முற்போக்குக் கழக மாவட்டச் செயலாளராகவும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் பதவி வகித்து வருகிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு கதிர்வேல் தான் செய்த வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு விழுப்புரத்துக்கு வந்துவிட்டார்.
கடந்த 6-ம் தேதி நள்ளிரவு அவரின் வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில், வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்தார் கதிர்வேல். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் கதிர்வேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
கொலை செய்யப்பட்ட கதிர்வேல்
இந்தச் சம்பவம் பற்றி விசாரித்த காவல்துறையினரிடம் பேசிய கதிர்வேலின் மனைவி செண்பகவள்ளி, “நான் பாத்ரூம் போய்விட்டு வரும்போது வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் என் கண் எதிரிலேயே அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டது.
அதைப் பார்த்ததும் நான் மயங்கி விழுந்துவிட்டேன். நினைவு திரும்பியபோது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் என் வீட்டுக்கும் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டிருந்தனர்.
இந்த வீடு தொடர்பாக எங்களுக்கும், விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த விரோதத்தில் அவர்கள்தான் இந்தக் கொலையை செய்திருப்பார்கள்” என்று தெரிவித்த அவர் 5 பேரின் பெயர்களைக் கூறி அவர்களை சந்தேகப்படுவதாகக் கூறினார்.
வீடு
அதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் செண்பகவள்ளி சொன்ன அந்த 5 பேருமே ஊரில் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், கதிர்வேல் கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தில் ரத்தக் கறைகள் இல்லாததும் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அந்த சந்தேகப் பார்வை செண்பகவள்ளி மீது சென்றதால் அவரிடம் தங்கள் பாணியில் காவல்துறை விசாரிக்கத் தொடங்கியதில் மர்மம் விலகத் தொடங்கியது.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்துக்கிடக்கும் கதிர்வேல்
“என் வீட்டுக்காரரு மெட்ராஸ்ல ஒரு தனியார் கம்பெனியில வாட்ச்மேன் வேலை பாத்துக்கிட்டிருந்தாரு. மூனு மாசத்துக்கு முன்னாடி வேலை செய்த இடத்துல கணக்கை முடிச்சிக்கிட்டு செட்டில்மெண்ட் தொகை 3 லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு.
அன்னையில இருந்து அந்தக் காசை வெச்சிக்கிட்டு டாஸ்மாக் போயி தினமும் குடிச்சிட்டு வந்து என்கிட்ட சண்டை போட்டு என்னை அடிப்பாரு.
ஒருநாள் கூட விடாம தினமும் இப்படியே இருந்ததால எனக்கு அதிகமா மன உளைச்சல் ஆயிடுச்சி. ஒரு கட்டத்துல அடி தாங்க முடியாம அவரைக் கொலை செய்யணும்னு முடிவெடுத்தேன்.
சம்பவம் நடந்த அன்னைக்கும் அப்படித்தான் குடிச்சிட்டு வந்து என்கிட்ட சண்டை போட்டுட்டு நிதானம் இல்லாம தூங்கிட்டு கெடந்தாரு.
அப்போ வீட்டுல இருந்த மரம் வெட்டும் கத்தியை எடுத்து அவர் கழுத்துல ரெண்டு தடவை வேகமா வெட்டினேன். அதுல அவரு துடிதுடிச்சி முனகிட்டே செத்துட்டாரு.