தமிழகத்தை உலுக்கிய 7 வயது சிறுமி வழக்கில் இளைஞருக்கு தூக்கு!
12 Jan,2022
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் 7 வயது சிறுமி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் காணாமல் போனார்.
இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் சிறுமியைத் தேடினர். சிறுமி கிடைக்காத நிலையில் காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் பொலிசார் தீவிரமாக தேடி வந்தநிலையில், கிராமத்திற்கு அருகே கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து, சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகளின் படி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சாமிவேல்(26) என்கிற ராஜாவை கைது செய்து விசாரணை செய்தபோது, அவர் சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜாவிற்கு 3 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து சாமிவேலுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொலிசார் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிக்கு வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு குற்றவாளி சாமிவேலுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.