வெளிநாட்டில் இருந்து, சென்னை வரும் வயதானோர் மற்றும் கர்ப்பிணியருக்கு, பரிசோதனையில் கொரோனா இல்லை என்றால், ஏழு நாட்கள் தங்குவதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு காரணமாக, விமான போக்குவரத்து தடைபட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள், நாடு திரும்ப முடியவில்லை. தற்போது, லண்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் வரும் பயணியருக்கு, விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தனியார் ஓட்டல்கள் அல்லது மாநகராட்சி தனிமை முகாமில், ஏழு நாட்கள் தங்க வைக்கப்பட்டு, தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது.
பரிசோதனையில், கொரோனா தொற்று இருந்தால், தனியார் அல்லது அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவர்.கொரோனா அறிகுறி இல்லாதவர்களை, ஏழு நாட்கள் தங்க வைத்து, அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு, 14 நாட்கள் தனிமையில் இருக்க வலியுறுத்தப்படுகின்றனர். கொரோனா அறிகுறி இல்லாத போது, எதற்கு, ஏழு நாட்கள் இருக்க வேண்டும் என, தனியார் ஓட்டல்களில் தங்கியிருந்த சில பயணியர் தகராறு செய்கின்றனர்.
இரு தினங்களுக்கு முன், கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில், தகராறு செய்த பயணியரிடம், போலீசார் சமரசம் பேசினர்.இந்நிலையில், வயதானோர் மற்றும் கர்ப்பிணியர், ஏழு நாட்கள் தனிமையில் இருக்க, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது, பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாளில் வரும். அதுவரை, ஓட்டல் அல்லது தனிமை முகாமில் இருக்க வேண்டும். கொரோனா இல்லையென்றால், உடனே ஊருக்கு செல்லலாம். ஆனால், வீட்டில், 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.மற்றவர்கள், ஏழு நாட்கள், ஓட்டல் அல்லது மாநகராட்சி தனிமை முகாமில், கண்டிப்பாக இருக்க வேண்டும் என, மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.