ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி ஏன்?
29 Apr,2020
'நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற, 50 தொழில் அதிபர்கள் வாங்கிய, 68 ஆயிரத்து, 307 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது ஏன்?' என, மத்திய அரசுக்கு, காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது:வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாத, 50 பேரின் பட்டியலை வெளியிடும்படி, பார்லிமென்டில் நேரடியாகவே கேள்வி எழுப்பினேன். ஆனால், மத்திய நிதி அமைச்சர், அதற்கு பதில் அளிக்கவில்லை.
இதே கேள்வி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட, 50 தொழில் அதிபர்கள் வாங்கிய, 68 ஆயிரத்து, 307 கோடி ரூபாய் கடன் தள்ளபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இவர்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விபரத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலான தொழில் அதிபர்கள், பா.ஜ., வின் நண்பர்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள, 50 பேரின் கடன்கள், ஏன் தள்ளுபடி செய்யப்பட்டன என, பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்; இது ஒரு மோசடியான செயல்.இதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை, பிரதமருக்கு உண்டு. மத்திய அரசு, நேர்மையற்ற முறையில் எப்படி செயல்படுகிறது என்பதற்கு, இது ஒரு நல்ல உதாரணம். நாடு முழுதும் உள்ள மக்கள், கொரோனா மற்றும் ஊரடங்கால் அவதிப்பட்டு வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை.ஆனால், தொழில் அதிபர்கள் வாங்கிய, 68 ஆயிரத்து, 307 கோடி ரூபாய் கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.