சென்னை நிலவரம்!600 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்புகள்:இந்தியால் 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது
28 Apr,2020
தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 600 ஐ நெருங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. மத்திய அரசால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெட்ரோ நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயப்புரத்தில் 158 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. திரு.வி.க நகரில் 94 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணா நகரில் 53 பேரும், தண்டையார்பேட்டையில் 66 பேரும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகமாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.
30 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு! – ஆயிரத்தை நெருங்கிய பலி!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 3,548 பேரும், டெல்லியில் 3,108 பேரும், ராஜஸ்தானில் 2,262 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,333 பேரும், தமிழகத்தில் 1,937 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.