நடப்பு ஏப்ரலில், இந்தியாவின் சர்வதேச விமான பயணியர் எண்ணிக்கை, 89 சதவீதம் குறைந்துள்ளதாக, ஐ.நா.,வின் சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவலை தடுக்க, உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால், விமான போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்ட ஜனவரியில், இந்தியா, சர்வதேச விமான பயணியர் சேவையை, 100 சதவீதம் மேற்கொண்டது. இது, பிப்ரவரியில், 98 சதவீதமாக இருந்தது. மார்ச்சில், சடாரென, 29 சதவீதமாக குறைந்தது. இதனால், இந்தியாவின் சர்வதேச விமான பயணியரை கையாளும் திறன், 20 லட்சத்து, 77 ஆயிரத்து, 578 ஆக சரிவடைந்தது.
நடப்பு ஏப்ரல் மாதத்தில், இந்த எண்ணிக்கை, மேலும் வீழ்ச்சி கண்டு, 89 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளது. இதன்படி, இந்தியா, ஏற்கனவே மதிப்பிட்டதை விட, சர்வதேச அளவில், 62 லட்சத்து, 63 ஆயிரம் பயணியருக்கான சேவையை இழந்துள்ளது. இதையடுத்து, இந்தாண்டு, ஜன., - செப்., வரையிலான ஒன்பது மாதங்களில், முன்னணி விமான நிறுவனங்களுக்கு, 12 லட்சம் கோடி முதல், 18 லட்சம் கோடி ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
29 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும்
மேலும் அந்த அமைப்பு கூறுகையில், கொரோனா தாக்கத்தால், இந்திய விமான சேவை மற்றும் அது சார்ந்த துறைகளில், 29 லட்சத்து, 32 ஆயிரத்து, 900 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். விமான நிறுவனங்களின் உள்நாட்டு சேவையில், 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்படும். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், 1.12 கோடி வேலைவாய்ப்புகள் பாதிக்கும் அபாயம் உள்ளது என கூறியது.