சோதனை ஓட்டத்தின் போது விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்!
18 Sep,2019
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட ரஸ்தம் 2 ஆளில்லா விமானம் கர்நாடக மாநிலத்தில் பாக்குத் தோப்பு ஒன்றில் விழுந்து நொறுங்கியது. ரஸ்தம் வகை ஆளில்லா விமாங்கள், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ரஸ்தம் 2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று காலை நடத்தப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டுத் தொடர்பை இழந்த ஆளில்லா விமானம் ஜோடி சில்லென்னஹள்ளி (Jodi Chillenahalli) என்ற இடத்தில் பாக்குத் தோப்பு ஒன்றில் விழுந்து நொறுங்கியது.
விமானம் விழுந்து நொறுங்கியபோது ஏற்பட்ட வெடிச் சத்தம் கேட்டு அந்த நேரத்தில் பணிக்கு வந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் பதற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர். எனினும் விமானம் விழுந்த இடத்தில் எவரும் இல்லாததால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ரஸ்தம் 2 சோதனை ஓட்டம் ஏற்கனவே ஒருமுறை கடந்த ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்டது.