இளம் பெண்ணைக்கடத்தி பாலியல் வன்கொடுமை.. போலி பொலிஸ் கைது.!
16 Sep,2019
சென்னையில் தான் நடத்தி வந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த அந்த மோசடி நபர் தன்னை போலீஸ் அதிகாரி என்றும், தொழிலதிபர் என்றும் கூறி பலரையும் ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயதான இளம்பெண் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டது. அந்த பெண்ணை, அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராஜேஷ் பிரித்வி என்பவர் கடத்திச் சென்றிருப்பது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. கடத்தப்பட்ட பெண் திருப்பூர் நொச்சிப்பாளையத்தில் இருக்கும் தகவல் தெரிந்து எழும்பூர் போலீசார் அங்குச் சென்று அவரை மீட்டனர்.
கடத்தி ஒரு வீட்டிற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த ராஜேஷ் பிரித்வி தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டான். கடந்த ஒரு வார காலமாக அந்த நபரை போலீசார் தேடி வந்த நிலையில், கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று ராஜேஷ் பிரித்வி பெண்ணின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தகவல் கிடைத்து போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த நபர் எழும்பூரில் நடத்தி வந்தது போலியான நிறுவனம் என்றும், அதன் மூலம் மருத்துவ படிப்பிற்கு சீட்டு வாங்கி தருவதாக பலரையும் ஏமாற்றி பணம் மோசடி செய்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். தனது நிறுவனத்தில் பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னை காவல் உதவி ஆய்வாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு பல மோசடிகளிலும் ஈடுப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய பெயரை தினேஷ், ராமகுரு, தீனதயாளன் என மாற்றிக் கூறி 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், திருச்சி, கோவை, திருப்பூர் மற்றும் ஆந்திர மாநிலத்திலும் இவன் மீது வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவனது போலி நிறுவனத்தில் இருந்து காவல் துறையினரின் போலி சீருடை, போலியான போலீஸ் அடையாள அட்டை என பல்வேறு அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோசடி நபர் ராஜேஷ் பிரித்வியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.