ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் வந்த 3 பேர்..!
13 Sep,2019
ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் வந்த 3 பேர்..!ஜம்மு காஷ்மீரில் ஏற்கெனவே தீவிரவாதிகள் ஊடுருவிவருவதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் லாரி ஒன்று சிக்கியுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு லஷ்கர்- இ-தொய்பா, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 50 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வந்துள்ளனர்.
காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லை பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பதாகவும் கூறப்படுவிதால் ராணுவம் உஷார் படுத்தப்பட்டு காஷ்மீரில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்றதொரு வாகன சோதனையில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்த லாரி சிக்கியிருப்பதாக கத்துவா எஸ்எஸ்பி தெரிவித்துள்ளார். அந்த ஆயுதங்கள் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்பட்டன? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும் லாரியில் வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மூன்று பேரும் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் எஸ்பி கூறியுள்ளார்.
இதனிடையே, 4 ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 6 மேகசைன்கள், 180 சுற்று தோட்டாக்கள் 11 ஆயிரம் ரூபாய் பணத்தோடு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளைப் பிடித்திருப்பதாக கத்துவா எஸ்.எஸ்.பி. ஸ்ரீதர் பாட்டீல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் பக்கத்தில் இருந்து வந்த அந்த லாரி காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும், பஞ்சாப் எல்லையில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்