விசாரணைக்கு வருகிறது நளினியின் பிணை மனு!
12 Sep,2019
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தனது பிணைக்காலத்தை மேலும் நீடிக்குமாறு வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகளான சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
பிணைக்காலத்தை மேலும் நீடிக்க கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், “இலங்கையில் இருக்கும் தனது மாமியார் இந்தியா வருவதற்கான விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் இந்தியா வருவதற்கு தாமதம் ஆகுவதாகவும், இம்மாத இறுதியிலேயே அவர் இந்தியா வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே தனக்கு வழங்கப்பட்டுள்ள பிணைக்காலத்தை மேலும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கக்கோரியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தனது மகள் ஹரித்திராவின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பிணையில் விடுதலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது