வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 வருட சிறை: வருகிறது புதிய சட்டம்
02 Sep,2019
வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வைத்தியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் இருக்கின்ற நிலையில் புதிய சட்ட வரைபுக்கு மத்திய அரசு தயாராகிறது.
வைத்தியர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என சட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இதேபோல் வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வைத்தியசாலை, சுகாதார பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டால் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். அதோடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த சட்டம் மூலம் வைத்தியர்கள், மருத்துவ பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் பணியில் இருக்கும் வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் 75 சதவீத வைத்தியர்கள் பணியில் இருக்கும்போது தாக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு வங்காளத்தில் கடந்த ஜுன் மாதம் வைத்தியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது.
இந்தக்குழு மற்றும் இந்திய மருத்துவ சங்கம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய சட்டவரைபு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “வைத்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவத்தை புறக்கணித்து விட முடியாது. இதற்கு கண்டிப்பாக முடிவுகட்ட வேண்டும்.
மத்திய அரசு இதற்காக புதிய சட்டம் கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டோம். விரைவில் சட்டவரைபு தாக்கல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன்பின்னர் மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். இந்த சட்ட வரைபு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.