பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மீது எந்த உரிமையும் இல்லை – ராஜ்நாத் சிங்
29 Aug,2019
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த நாடும் இல்லை என்றும் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மீது எந்த உரிமையும் இல்லை எனவும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லடாகில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பாகிஸ்தான் நாடு, பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கும் போது இந்தியா எவ்வாறு பாகிஸ்தானுடன் பேச முடியும்?
பாகிஸ்தானுடன் நட்புறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால் அது முதலில் இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தை கொண்டு வர முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும். காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லை.
நான் பாகிஸ்தானைக் கேட்க விரும்புகிறேன், காஷ்மீர் எப்போது பாகிஸ்தானுக்கு சொந்தமானது? காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது.
காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை நிறுத்துவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.