முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே தலைமறைகிவிட்டார்? – சுப்பிரமணியன் சுவாமி
21 Aug,2019
ப.சிதம்பரத்தின் முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஊழல் நிறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே தலைமறைகிவிட்டார்? என மூத்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இது குறித்தது இன்று (புதன்கிழமை) டுவிட்டரில் இந்த கேள்வியை தொடுத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஊழல் நிறைந்த முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எங்கே தலைமறைவாகி உள்ளார்? அவரை சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறை அதிகாரிகள் வலைவிரித்து தேடி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மற்றொரு பதிவில், “ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கை விசாரித்தது யார்? அமுலாக்கத்துறையின் இணை இயக்குநர் டாக்டர்.ராஜேஷ்வர் சிங். பதவி உயர்வு மறுக்கப்பட்டு, லக்னோவிற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது தான் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு. மற்றும் கலியுகம்”. என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்பிணை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
மேலும், இந்த முறைகேட்டில் முக்கிய நபரான ப.சிதம்பரம் செயற்பட்டிருப்பது, வெளிப்படையாக தெரியவருகிறது. இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு, சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத் துறை ஆகிய அமைப்புகளுக்கு இதுவரை இருந்து வந்த தடை நீங்கியுள்ளது.
ப.சிதம்பரத்தின் முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக டெல்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர்.
அப்போது, அவர் வீட்டில் இல்லை. அவரை செல்லிடை பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதனை உறுதி செய்துகொண்ட அதிகாரிகள், மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், அவரது வீட்டுக்கு மீண்டும் வந்த அதிகாரிகள், சி.பி.ஐ. துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி முன்பாக 2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற அறிவுறுத்தல் அடங்கிய நோட்டீஸை ஒட்டிவிட்டு சென்றனர். இதே நோட்டீஸ், ப.சிதம்பரத்தின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.