வீடுகளில் மீண்டும் ரகசிய குறியீடு: வடமாநில இளைஞர்கள் 3 பேர் சிக்கினர்
17 Aug,2019
திண்டிவனம் அருகே வீடுகளில் மீண்டும் ரகசிய குறியீடு வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து 3 வடமாநில வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் மானூர் அருகே கோபாலபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 12ம் தேதி காலை இங்கு வடமாநில இளைஞர்கள் சிலர் வீடு வீடாகச்சென்று பழைய துணிமணிகள் வாங்கி சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் வீடுகளின் மதில் சுவர்களில் கலர் பென்சிலால் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருந்ததைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பழைய துணி வாங்க வந்த வடமாநில இளைஞர்கள்தான் இந்த ரகசிய குறியீட்டை வரைந்திருப்பார்கள் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்க வடமாநில இளைஞர்கள் திட்டமிட்டார்களா? என்ற அச்சம் அப்பகுதியில் பரவியது. இதனால் கிராம மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இந்நிலையில் திண்டிவனம் நகரப்பகுதியான காந்திநகரில் உள்ள வீடுகளின் சுவர்களிலும் ரகசிய குறியீடு வரையப்பட்டிருந்தது. நேற்று காலை இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வடமாநில இளைஞர்கள்தான் இதனை வரைந்திருப்பார்கள் என்று சந்தேகப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசிய குறியீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ரகசிய குறியீட்டை வரைந்தது யார்? என ஆய்வு செய்தனர். அந்த கேமராவில் 3 வடமாநில வாலிபர்கள் ரகசிய குறியீடு வரைந்துவிட்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நேபாளம் மாநிலம் பசான் மாவட்டம் நவரா கிராமத்தை சேர்ந்த விஜயகுமார், அஜய்குமார், சந்துருசாய் என்பதும், கூர்கா வேலை செய்து வருவதும், பணம் கொடுக்காத வீடுகளில் இவர்கள் இந்த ரகசிய குறியீடு வரைந்தது தெரியவந்தது. இதுகுறித்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.