இன்னமும் பல்லிக்கும் கரப்பானுக்கும் பயந்துகிட்டுதான் இருக்கிறா'' - மகள் நளினி பற்றி அம்மா!
13 Aug,2019
"'உங்க உயிரு என் மடியிலதாம்மா போகும். கவலைப்படாதீங்க'ன்னு ஆறுதல் சொன்னா!''
ஒரு அம்மாவுக்கு, தான் பெற்றவர்களில் `ஓஹோவென்று வாழும் பிள்ளைகளை'விட, வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற பிள்ளைகள் மீதுதான் அக்கறை அதிகம் இருக்கும். பாசத்தைக்கூட, அந்தப் பிள்ளைகளின் மீது சற்று கூடுதலாகத்தான் காட்டுவார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதியாக இருக்கிற நளினியின் அம்மா பத்மாவின் நிலையும் இதுதானே... 28 வருடங்கள் அம்மாவையும் குடும்பத்தையும் பிரிந்து சிறையில் இருந்துவிட்டு, மகள் திருமணத்துக்காக தற்போது ஒரு மாத பரோலில் வந்திருக்கும் நளினி எப்படியிருக்கிறார்; அவருடைய இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள அவருடைய அம்மா பத்மாவிடம் பேசினோம்.
"நான் ஆரத்தி எடுத்தப்போவோ நளினி கண்கலங்கினதை நீங்க எல்லோரும் பார்த்திருப்பீங்களே. அதற்கப்புறம், என் பொண்ணை கட்டிபிடிச்சுகிட்டு கொஞ்சித் தீர்த்தேன். எத்தனை வயசானாலும் தாய்க்கு மகள் குழந்தைதானே.
`உன்னைப் பிரிஞ்சு இருக்கிற நிலைமை இனி எனக்கு வேணாம் கண்ணு'ன்னு சொல்லிட்டு அழுதேன். அவளுக்கு நான் அழுதது தாங்க முடியலை. `உங்க உயிரு என் மடியிலதாம்மா போகும். கவலைப்படாதீங்க' ஆறுதல் சொன்னா'' என்கிற பத்மா அம்மாவின் குரலில் மகளைப் பார்த்த மகிழ்ச்சியும், மகளைப் பிரிந்துவிடுவோமோ என்கிற பயமும் போட்டிப்போட்டுக்கொண்டு தெரிகிறது.
பேத்தி திருமண விஷயம் எந்தளவில் இருக்கிறது என்றோம்.
"ஆடி மாசம் முடிஞ்சாதான் கல்யாணம் பற்றிய பேச்சுவார்த்தையே ஆரம்பிக்க முடியும். இலங்கையில நளினியோட மாமனார் புற்றுநோய் நாலாவது ஸ்டேஜில இருக்கார். அதனால, ஶ்ரீகரனோட அம்மா, உடன்பிறந்தவங்க எல்லோரும் அவர்கூடவே இருக்காங்க. அதனால, அவங்களால இப்போதைக்கு வர முடியாது. தவிர, பேத்திக்கு வர்ற செப்டம்பரில் பரீட்சை இருக்கிறதால அவ மும்முரமா அதுக்கு ரெடியாகிட்டிருக்கா'' என்றவரின் பேச்சு மறுபடியும் மகள் நளினியிடமே திரும்புகிறது.
"கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே நளினிக்குக் கடவுள் பக்தி அதிகம்மா. விநாயகர்தான் அவளோட இஷ்டதெய்வம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, பெளர்ணமி, அமாவாசைன்னு விரதம் இருப்பா. சிறையில இருந்தப்போவும் எல்லா விரதங்களையும் ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கா. இதோ, இப்ப பரோல்ல வந்தபிறகும் அப்படியே நாள், கிழமைன்னு எல்லா விரதமும் இருக்கா. அதனாலதான், ரொம்ப பலவீனமாயிட்டாம்மா.
சிறையில இருந்து வந்த அன்னிக்கு வெறும் ரசம் சாதம்தான் பண்ணிக்கொடுத்தேன். அடுத்த ரெண்டு நாள் சூப், கறி, மீன்னு செஞ்சு தந்தேன். அதுக்கப்புறம் நளினி என்னை சமையல்கட்டுப் பக்கமே போக விடுறதில்ல. நீ ரெஸ்ட் எடும்மா. எல்லா வேலையையும் நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டா'' என்று பூரித்தவர், 'டேய் தம்பி இஞ்சி, பூண்டு எல்லாம் வாங்கிட்டு வந்துட்டியா? சீக்கிரம் மாடிக்குப் போ. எல்லோரும் மசாலா சாமான்களுக்குத்தான் காத்திருக்காங்க' என்று ஓங்கி குரலெழுப்பினார்.
"என்ன ஸ்பெஷல் இன்றைக்கு?" என்றோம்.
"தம்பி பாக்கியநாதன் வந்திருக்கிறான். அப்புறம் நளினியோட சின்ன மாமியார் குடும்பம் வந்திருக்கு. அதனால, எல்லோரும் சேர்ந்து பிரியாணி பண்ணிக்கிட்டிருக்காங்க.
நளினி நல்லா சமைப்பா கண்ணு. சிறையில அவளே சமைச்சுதானே சாப்பிட்டுக்கிட்டிருந்தா. அதனால, சமையல்ல டச் விட்டுப்போகலை. சாம்பார் நல்லா வைக்கிறா.
காலையில நாலரை, அஞ்சு மணிக்கெல்லாம் கண்விழிச்சிடுறா. யோகா பண்றா. ஆனா, ஒரு அம்மாவா அவளை கவனிச்சதுல நளினிக்கு மன அழுத்தம் நிறைய இருக்கும்மா. பகல் முழுக்க வீட்டைப் பெருக்கறது, துடைக்கறது, தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணி ஊத்தறதுன்னு எந்நேரமும் ஏதோ ஒரு வேலையை செஞ்சுக்கிட்டே இருக்கா. மன அழுத்தத்தை சமாளிக்கத்தான் மனசையும் உடம்பையும் பிசியாவே வைச்சுக்கிறாபோல.
ஒரு கோயிலுக்குப் போக முடியலை; கடைத்தெருவுக்குப் போய் பிடிச்ச பொருளை வாங்க முடியலைன்னு வருத்தப்படறா'' என்றவர் தொடர்ந்தார்.
"வளர்த்தக் கதை, வாழ்ந்த கதைன்னு நிறைய பேசிக்கிட்டிருக்கோம்மா. சின்ன வயசுல பல்லிக்கும் கரப்பான்பூச்சிக்கும் பயப்படுவா நளினி. இவ்வளவு போராட்டங்களுக்கு அப்புறமும் அவ இன்னமும் பல்லிக்கும் கரப்பானுக்கும் பயந்துக்கிட்டுதான் இருக்கா'' என்று சிரிக்கிறார்.
நானும் என் பொண்ணும் சேர்ந்திருக்கிற மாதிரி, என் பொண்ணு அவ பொண்ணோட சேரணும்மா. தன் குழந்தையோட ரெண்டு வயசு வரைக்கும்தான் கூட இருந்தா. அதுக்கப்புறம் தன் மகள் ஹரித்ராவை பிரிஞ்சேதான் இருக்கிறா. ஒரு அம்மாவா என் பொண்ணு ரொம்ப பாவம்மா!'' என்பவரின் குரலில் மகளின் வலி தெரிகிறது.