காஷ்மீர் விவகாரம்- பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது
06 Aug,2019
காஷ்மீர் விவகாரத்தில் அடுத்து என்ன நகர்வு? என்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசரமாக கூடவுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசின் நகர்வுக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எதிர்ப்பு வௌியிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சர்வதேச பிரச்சினையில் (காஷ்மீர்) பாகிஸ்தானும் ஒரு தரப்பாகும், இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க தேவையான நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளும்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு ஆணையகத்தின் தீர்மானத்தின் படி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது.
இப்போது எட்டப்பட்டுள்ள முடிவு காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெற்றோ, பாகிஸ்தானின் ஒப்புதலை பெற்றோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமர்வுகளை கூட்டுவதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.