காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா தயார் – டொனால்ட் ட்ரம்ப்
02 Aug,2019
காஷ்மீர் விவகாரத்தில் இருநாட்டு தலைவர்களும் இணங்கினால் அமெரிக்கா தலையிட தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அருமையான மனிதர்கள். இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது.
இரு நாட்டு பிரதமர்களும் கோரிக்கை வைத்தால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா தயாராக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபர் மத்தியஸ்தம் வகிப்பது என்ற கருத்திற்கே இடமில்லை என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா என மோடி கேட்டார் என்றும், இரு நாடுகளும் சேர்ந்து தன்னை மத்தியஸ்தத்திற்கு அழைத்தால் அதற்கு தயாராக இருப்பதாக தாம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்பின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.