ஆற்றில் குதித்த தொழிலதிபர் காஃபி டே நிறுவனர் சித்தார்தா சடலமாக மீட்பு!
01 Aug,2019
தொழில் நெருக்கடி மற்றும் கடன் சுமை காரணமாக கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்தா மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம், 36 மணி நேரத்திற்குப் பிறகு கரை ஒதுங்கியது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் ஆயிரத்து 843 இடங்களில் கிளை பரப்பியுள்ள கஃபே காஃபி டே என்ற தொழில் சாம்ரஜ்யத்தைக் கட்டமைத்தவர் வி.ஜி.சித்தார்தா. இவர், கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். திங்கள் கிழமை அன்று மாலை ஓட்டுநர் பவசராஜ் பட்டீல்-உடன் டொயோட்டா இன்னோவா காரில் பெங்களூருவில் இருந்து சக்லேஷ்பூர் சென்று கொண்டிருந்த சித்தார்தா, திடீரென்று காரை மங்களூருவுக்கு திருப்புமாறு கூறியுள்ளார். உல்லால் என்ற இடத்தில் பாலத்தின் மீது கார் சென்ற போது, காரை நிறுத்தச் சொன்ன சித்தார்தா, காரை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார்.
பாலத்தின் மறுமுனைக்கு நடந்தே சென்ற அவர், பல மணிநேரமாகியும் திரும்பாததால், ஓட்டுநர் பசவராஜ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலை அடுத்து அங்கு போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்ட போது, ஒருவர் ஆற்றில் குதித்ததை பார்த்ததாக ஒரு மீனவர் தெரிவித்தார். இதை அடுத்து சித்தார்தாவை தேடும் பணியில் கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஈடுபடுத்தப்பட்டது. இதற்கிடையே சித்தார்தாவின் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், லாபமீட்டும் வகையில் சரியாக தொழில் செய்யவில்லை என்றும், இதற்கு மேல் அழுத்தத்தை தாங்க முடியாது என்றும் கூறப்பட்டு இருந்தது.
வருமான வரித்துறை அதிகாரியின் தொந்தரவு, கடன் பிரச்சனை, பங்குதாரர்களின் அழுத்தம் ஆகிய காரணங்களையும் சித்தார்தா சுட்டிக் காட்டி இருந்ததால், அவர் தற்கொலை முடிவை நாடியது உறுதியானது. இரவு, பகலாக நேத்ராவதி ஆற்றில் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில், சித்தார்தா குதித்த இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அவரது சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட போலீசார், உறவினர்கள் மூலம் அது சித்தார்தா தான் என்பதை உறுதி செய்தனர். இதை அடுத்து அவரது சடலம் மங்களூருவில் உள்ள வென்லாக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சொந்த ஊரான சிக்மகளூருவில் சித்தார்தாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
உடற்கூறாய்வுக்குப் பின்னர் சித்தார்தாவின் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். சிக்மகளூருவில் சித்தார்தாவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
உடற்கூறாய்வுக்குப் பின்னர் சித்தார்தாவின் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சித்தார்தாவின் சொந்த ஊரான சிக்மகளூருவுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் சித்தார்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சித்தார்தாவின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதள எம்.எல்.ஏ.க்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, வருமான வரித்துறையினரின் துன்புறுத்தலால் சித்தார்தா, சில நாட்களாக வருத்தத்தில் இருந்தார் என்று அவரது நண்பரும், சிரிங்கேரி எம்எல்ஏவுமான ராஜேகவுடா தெரிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகாலமாக நெருங்கிய குடும்ப நண்பராக விளங்கிய சித்தார்தா, கடனுக்காக சொத்துக்களை விற்க முடிவு செய்து இருந்ததாகவும் ராஜேகவுடா கூறினார்.
இந்த நிலையில் சித்தார்தா மறைவை அடுத்து, கபே காபிடே நிறுவனத்தின் நிர்வாக குழுவுக்கு இடைக்கால தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். முதலீட்டாளர்கள், கடன்தாரர்கள், பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் நலனை காக்க நிர்வாக குழு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்தா உயிரிழப்பால் இரண்டாவது நாளாக காபி டே நிறுவனத்தின் பங்கு விலை 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.