முகலாயர் காலத்தின் நாணயங்கள் மீட்பு!
28 Jul,2019
கட்டுமானப் பணிக்காக குழி தோண்டியபோது கிடைத்த முகலாயர் கால நாணயங்களை, உத்தரப் பிரதேச பொலிஸார் மீட்டு தொல்பொருள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் முண்ட பாண்டே நகரைச் சேர்ந்தவர் குலாம் நபி. கட்டுமான ஒப்பந்ததாரரான இவர், தனது பணியாளர்கள் சிலருடன் சேர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் சிம்லாவில் கட்டுமானப் பணி ஒன்றை எடுத்திருந்தார். அதற்காக குழி தோண்டியபோது, பழங்கால நாணயங்கள் கிடைத்துள்ளன. அவைகளை, ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், பணி முடிந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர், அந்த நாணயங்களை பங்கிட்டுகொள்வது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற பொலிஸார், குலாம் நபியிடம் இருந்த 698 நாணயங்களை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, மொராதாபாத் லல்லன் சிங்கைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மொராதாபாத்தைச் சேர்ந்த குலாம் நபி என்ற ஒப்பந்தக்காரர் மூன்று தொழிலாளர்களுடன் சிம்லாவில் ஒரு இடத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது இந்த நாணயங்கள் கிடைத்ததாகக் கூறினார்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாணயங்கள் 16 மற்றும் 17ம் நூற்றாண்டு காலகட்டத்துக்கு இடைப்பட்டதாக இருக்கலாம். ஒரு சில நாணயங்கள் பேரரசர்கள் அக்பர் மற்றும் அவுரங்கசீப் காலங்களைச் சேர்ந்ததாக இருக்கலாம். மீட்கப்பட்ட நாணயங்களின் எடை 7.9 கிலோ. அவைகள், இந்திய தொல்பொருள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.