இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்
04 Jul,2019
இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்.
தி.மு.க.வின் முக்கிய பதவியான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 1980களில் அனைத்துக் கட்சிகளும் இளைஞர் இயக்கத்தைக் கட்டமைக்க ஆரம்பித்தபோது தி.மு.க.வும் இளைஞர் அணியை உருவாக்கியது. அதன் முதல் செயலாளராக மு.க.ஸ்டாலின் செயற்பட்டார். அவரைத் தொடர்ந்து கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன் என வாரிசுகள் பதவியேற்றனர்.
இந்நிலையில், நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமையை ஏற்றுள்ள தந்தைக்கு உதவியாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு, மாவட்டம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. இளைஞரணி தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வாரியாக தி.மு.க. தலைமைக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.
கமல், ரஜினி, சீமான் போன்றவர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் தி.மு.க.வும் புதிய வடிவம் எடுக்கவும் இளம் தலைமுறையினர் மத்தியில் கட்சியை வலுவாகக் கொண்டு செல்லவும் முடிவெடுத்தாகவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இதனால் தி.மு.க. இளைஞரணியின் மாநிலத் தலைமைக்கு உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் வெள்ளக்கோயில் சாமிநாதன் திடீரென தனது இராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பினார். அதை மேலிடமும் ஏற்றுக்கொண்டது.
இதனால் இளைஞரணி பொதுச் செயலாளர் பொறுப்பு வெற்றிடமாகவுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி பொதுச்செயலாளராக அறிவிக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக தி.மு.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.