மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய உணவுத்துறை மந்திரி பஸ்வான் நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசுகையில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகவும், இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள் நாட்டின் எந்த மூலையிலும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட் களை பெற முடியும் என்றும், இதனால் ஒரு குடும்பத்தினர் பல ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்றும் கூறினார்.
மந்திரி பஸ்வான் நேற்று இந்த புதிய திட்டம் குறித்து டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்களில் பொது வினியோக திட்டங்களில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளும் வசதி உள்ளது. இன்னும் ஓர் ஆண்டுக்குள், அதாவது அடுத்த ஆண்டு ஜூன் 30-ந் தேதிக்குள் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு ‘கெடு’ விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வாங்க பி.ஓ.எஸ். கருவி பயன்படுத்தப்படுவதால், இந்த மாநிலங்களில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை எளிதில் செயல்படுத்த முடியும்.
நாடு முழுவதும் உள்ள 89 சதவீத பயனாளிகளின் ஆதார் கார்டுகள், ரேஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. 77 சதவீத ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். கருவிகள் உள்ளன.
இதனால் இந்த புதிய திட்டத்தின் கீழ் பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தங்கள் ஆதார் கார்டுகளை காட்டி பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். தங்களுக்குரிய குறிப்பிட்ட ரேஷன் கடையில் மட்டும் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்தான் ரேஷன் கார்டு தேவை.
இந்த புதிய திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புக்காக நாடு முழுவதும் இடம் பெயர்ந்து செல்லும் மக்கள்தான் அதிகம் பயன்பெறுவார்கள். ஒரு ரேஷன் கடையை மட்டுமே சார்ந்து இருக்க தேவை இல்லை. போலி ரேஷன் கார்டுகளும் ஒழிக்கப்படும். இவ்வாறு மந்திரி பஸ்வான் கூறினார்