கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிகல் நாட்டினார் பழனிசாமி!
27 Jun,2019
சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லீட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வட சென்னை பயன் பெறுகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியிலும் 100 மில்லியன் லீட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இங்கிருந்து தென் சென்னை பகுதியான திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு தினமும் 80 மில்லியன் லீட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இப்போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், கடல் நீரை குடிநீராக்கும் மேலும் ஒரு திட்டத்தை கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நெம்மேலியில் கூடுதலாக 150 மில்லியன் லீட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.