நன்னடைத்தை விதிகளின் கீழ் சசிகலா விடுதலை?
11 Jun,2019
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலாவை நன்னடைத்தை விதிகளின் கீழ் விடுவிக்கலாமென கர்நாடக சிறைத்துறை பரிந்துரை முன்வைத்துள்ளது.
கர்நாடக அரசுக்கு அம்மாநில சிறைத்துறை அனுப்பியுள்ள கடிதத்திலேயே சசிகலாவை விடுப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த தகவலுக்கமைய 1 அல்லது 2 வருடங்களில் விடுதலை அடைவதற்கு வாய்ப்புள்ளதாக சிறைசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், 4 வருட சிறை தண்டனையை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
குறித்த நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரணை செய்த நீதிமன்றம் நான்கு பேரையும் விடுதலை செய்யுமாறு கூறி உத்தரவு பிறப்பித்தது.
ஆனாலும் குறித்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருந்த வேளையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கின் விசாரணைகள் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதமொன்றை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.