இந்தியாவில் 1098 அழைத்தால் என்னவாகும்?
11 Jun,2019
இந்தியாவில் 1098 எனும் அவசர தொடர்பு எண்ணிற்கு அழைப்பு விடுத்தால் என்னவாகும் என்ற உண்மை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியா முழுக்க 1098 எனும் அவசர தொடர்பு எண்ணிற்கு அழைப்பு விடுத்தால் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்வுகளில் வீணாகும் உணவினை சேகரித்து அதனை தேவையானவர்களுக்கு வழங்குவர் என்ற தகவல் கொண்ட குறுந்தகவல் வாட்ஸ்அப் செயலியில் வைரலாகி வருகிறது.
உண்மையில் 1098 அவசர தொடர்பு எண்ணிற்கு அழைப்பு விடுத்தால், வீதிகளில் வாழும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கும் சைல்டு லைன் இந்தியா பவுண்டேஷனை தொடர்பு கொள்ளலாம். இந்தியா முழுக்க அவசர உதவியை எதிர்நோக்கும் குழந்தைகளை காப்பாற்றவே 1098 அவசர உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இலவச சேவை வருடம் முழுக்க 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் பரப்பப்படும் குறுந்தகவலில் 1098 அழைத்தால், வீணாகும் உணவுகளை சேகரித்து செல்வர் என்ற தகவல் முற்றிலும் பொய். இந்த தகவல் பரவுவதால், சைல்டு லைன் இந்தியா பவுண்டேஷனிற்கு தினமும் வரும் அழைப்புகளில் 15 சதவிகிதம் பேர் உணவை சேகரிக்கக் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவை சேகரித்துச் செல்லக் கோரி 1098 எண்ணிற்கு வரும் அழைப்புகளுக்கு சைல்டு லைன் இந்தியா சார்பில் 1098 எண் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கானது என தெரிவிப்பட்டு வருகிறது. 1098 எண் குழந்தைகள் நலன் காக்க இந்திய டெலிகாம் துறை சார்பில் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2009 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற தகவல் பரப்பப்பட்டது. தற்சமயம் இதே தகவல் மீண்டும் வைரலாகி பயனர்கள் மத்தியில் வீண் குழப்பத்தை விதைக்கிறது.
போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.