ஐ.எஸ்.கொடிகளுடன் இளைஞர்கள் கலவரம்: ஜம்மு- காஷ்மீரில் பதற்றம்
05 Jun,2019
ஜம்மு- காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடிகளுடன் பெரும்பாலான இளைஞர்கள் ஒன்றிணைந்து கலவரத்தில் ஈடுபட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகரிலுள்ள ஜமா மசூதியில் றம்ழான் பெருநாளை முன்னிட்டு, சிறப்பு தொழுகை இன்று (புதன்கிழமை) நடைபெற்றுள்ளது.
இதன்போது திடீரென அப்பகுதியில் முகத்தை மூடியவாறு திரண்ட இளைஞர்கள், காஷ்மீர் பாகிஸ்தானுடையது இது முஸாவின் இராணுவம் போன்ற கோஷங்களை எழுப்பி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த படையினர் மற்றும் பொலிஸார் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சர்வதேச பயங்கரவாதிகளான ஹஃபீஸ் சயீது, மசூத் அஸார் மற்றும் ஜாகிர் முஸா ஆகியோரின் புகைப்படங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் கலவரத்தை கட்டுபாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.