இமயமலையில் காணாமல் போனோருக்கான தேடுதலில் ஐந்து சடலங்கள் மீட்பு!
03 Jun,2019
இந்திய இமயமலையில் காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் ஐந்து சடலங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள விமானிகளுக்கு தென்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பிரித்தானியர்கள், இரண்டு அமெரிக்கர்கள், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஒருவர் அடங்கிய மலை ஏறுபவர்கள் குழுவொன்றை தேடும் முயற்சியிலேயே ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடும் பனிப்பொழிவு மற்றும் கடுமையான காற்று காரணமாக தற்போது மீட்புப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள மூன்று பேரை தேடும் பணிகள் நாளை தொடருமெனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7816 மீட்டர்ஸ் உயரமானஇந்த மலையில் பனிச்சரிவு ஏற்படுவதற்கு முந்தைய தினமான மே மாதம் 26 ஆம் திகதி முதல் இக்குழுவுடன் எந்தவொரு தொடர்புகளும் இல்லாத காரணத்தால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட இக்குழுவை சேர்ந்த மேலும் நால்வரும் மீதமுள்ள எட்டுப்பேரை மீட்பதற்கான முயற்சிகளில் உதவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடுமையான வானிலை காரணமாக இந்நால்வரும் மற்றவர்களை விட முன்னதாகவே திரும்பிவிட்டதாக தெரியவருகிறது.