“பள்ளிகளில் நாப்கின் எந்திரம் கட்டாயம்” – கேரள அரசின் புதிய முயற்சி!
29 May,2019
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின் பற்றி தற்போது மக்களிடம் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்திருக்கிறது.
மாதவிடாய் பெண்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய இயல்பான ஒன்று என்பதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக இந்தியாவிலேயே முதல் முறையாகக் கேரளாவில் அனைத்துப் பள்ளிகளிலும் நாப்கின் வழங்கும் எந்திரம் கட்டாயமாக்கப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாகக் கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்ஸ
“மாதவிடாய் சுத்தம் என்பது எல்லா பெண்களுக்கும் அவசியமான ஒன்று அதனால்தான் `சி பேட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
கேரளாவில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் இனி கட்டாயமாக இருக்க வேண்டும்.
ரசாயனம் அதிகம் இல்லாத, எளிதில் அப்புறப்படுத்தும் விதமான நாப்கின்கள் இனி பள்ளிகள் மூலமே பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
முதலில் கேரளாவிலுள்ள அத்தனை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதற்காக அரசு நிதியில் இருந்து 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கேரளாவில் வசிக்கும் ரேணுகாதேவி என்பவரிடம் கருத்து கேட்டோம். “உண்மையில் கேரள அரசின் செயல்பாடு வரவேற்கத்தக்கது.
பெண் குழந்தைகள் அவசரக் காலத்துக்கு பள்ளியில் இருந்து வெளியே சென்று பேட்கள் வாங்கிப்பயன்படுத்த வேண்டியிருந்தது.
இன்னும்கூட சில கிராமங்களில் நாப்கின் பயன்பாடு பற்றி முழுமையாகத் தெரியாமல் இருக்கின்றனர். பள்ளிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் வைப்பதன் மூலம் மாதவிடாய் பற்றி கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களின் நலனுக்காக யோசிக்கும் கேரள அரசுக்கு நன்றி” என்றார்