இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு!
26 May,2019
இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி அபார வெற்றியீட்டியுள்ளது.
இதற்கு வாழ்த்து தெரிவித்து, வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியின் அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
திராவிட முன்னேற்ற கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மேன்மேலும் வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டபோது திராவிட முன்னேற்ற கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும் கசப்புணர்வும் இருந்துவருவதை நீங்கள் அறிவீர்கள்.
இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் எமது மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். இதற்கு என்னாலான சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் நான் வழங்குவேன்.
அத்துடன் எமது மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காகவும் எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் நீங்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்” என மேலும் தெரிவித்துள்ளார்