தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரை விடுவித்தது உச்சநீதிமன்றம்
06 Mar,2019
கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரை விடுவித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரே நாளில் 8 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
இதில் மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான ஒரு வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. அவர்கள் 5 பேரை கொலை செய்ததாகவும், தாய், மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர்கள் சுமார் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தனர். இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கை மறுவிசாரணை செய்த உச்சநீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தவறு இழைக்கவில்லை என்று உறுதி செய்து அவர்களை விடுவித்தது.
இது தவிர, 16 ஆண்டுகளை சிறையில் கழித்த அந்த 6 பேருக்கும் மகாராஷ்டிர அரசு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நஸீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தவறாக குற்றச்சாட்டு பதிவு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கில் இதே நீதிபதிகள் அமர்வு, இரு நபர்களுக்கான தூக்கு தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவித்தது. முன்னதாக, அவர்கள் இருவருக்கும் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கடந்த 2015}ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2012}ஆம் ஆண்டு கொள்ளை முயற்சியின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்களை கொலை செய்ததாக அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக 9 வயது சிறுமியை சேர்த்ததை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து அவர்களை விடுவித்தது