தூக்கில் பிரசவித்த கர்ப்பிணி! – உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை
21 Dec,2018
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி என்ற நகரத்தில் இருந்த காவல் நிலையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குப் பெண் உதவி ஆய்வாளர் கவிதா சாஹ்னி தலைமையிலான காவலர்கள் சென்றனர். சம்பவ இடத்தைச் சென்று பார்த்தபோது மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பெண்ணை காவல்துறை அதிகாரி கவிதா ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் அணிந்திருந்த புடவைக்குள், அவரது வயிற்றுக்குக் கீழ் பகுதியில் ஏதோ அசைவு தெரிந்ததைக் கவனித்தார். அது என்னவென்று பார்த்தபோதுதான், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை, பிறந்துவிட்டது தெரிந்தது.
தொப்புள்கொடியுடன் இணைந்த நிலையில், தாயின் இரு கால்களுக்கு நடுவில் குழந்தை சிக்கியிருந்ததால், அதுவும் தொங்கிய நிலையிலேயே இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவிதா, உடனடியாக தொப்புள்கொடியை அறுத்து, குழந்தையை மீட்டார்.
அவரே குழந்தையை சுத்தப்படுத்தி, குழந்தைக்குக் கதகதப்பு கிடைக்குமாறு ஒரு துணியில் சுற்றி பத்திரமாக வைத்தார். அதன் பின்னர் தாயின் சடலம் கீழே இறக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.
மாட்டுத்தொழுவத்தில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்
தற்போது அப்பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் அந்த ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை கருவில் இருக்கும்போது இருந்த நிலையிலேயே (Position) பிறந்த பின்னரும் இருப்பதால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த 36 வயதான லக்ஷ்மி தாகூருக்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவர் ஒரு விவசாயி. சம்பவம் நடைபெற்ற தினத்தன்று கணவர் காலையில் எழுந்து பார்த்தபோது 9 மாத கர்ப்பிணியான மனைவியைக் காணவில்லை.
தேடியபோது மாட்டுத்தொழுவத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி இருப்பதைப் பார்த்துப் பதறி, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
“இந்தச் சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றாலும், குழந்தையையாவது உயிருடன் மீட்க முடிந்ததில் எங்களுக்கு நிம்மதி.
குழந்தையை எப்படியும் காப்பாற்றிவிட முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தாய் இறந்த பிறகும் குழந்தை உயிருடன் காப்பாற்றப்பட்டது மிகப்பெரிய அதிசயம் ” என்று காவல்துறை அதிகாரி கவிதா தெரிவித்துள்ளார்.
“தாய் தற்கொலை செய்துகொள்ளும்போது குழந்தை பிறந்தது பற்றி இதற்கு முன்னர் எங்கும் மருத்துவப் பதிவுகள் இல்லை. தாய் தற்கொலை செய்துகொண்ட நேரத்தையும் குழந்தை பிறந்த நேரத்தையும் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.
ஆனால், தாய் தொங்கிய நிலையில் இருந்ததாலேயே குழந்தை பிறந்துள்ளது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.