இனப்படுகொலையாளர்களுடன் இருந்துகொண்டு எங்களை விமர்சிப்பதா?
02 Dec,2018
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்த மதிமுகவின் ஆவடி அந்திரிதாஸ், நாம் தமிழர் கட்சியினர் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் பணம் பெற்று ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
உண்மையில் ஈழத்தமிழர்களுக்காகவும், விடுதலைப்புலிகளுக்காகவும் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் நம்பிக்கையை பெற்று, 7 தமிழர் தூக்கு தண்டனையை நிறுத்தியது உள்ளிட்ட தமிழர் வாழ்வுரிமை போராட்டங்கள், ஈழத்தமிழருக்கான பல போராட்டங்கள் என களத்தில் இயங்கி வரும் எங்கள் தலைவர் வைகோவை விமர்சிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆவேசம் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் மேற்கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு சமூக வலைத்தளங்களில் காட்டமாக பதிலளித்துவருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அக்கட்சியின் ஆதரவு நிலைப்பாடு கொண்டோர். ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த காங்கிரஸ், அப்போது மத்திய அரசில் பங்கு வகித்த திமுக என்ற இனப்படுகொலையில் பங்கு உள்ளவர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு எங்களை விமர்சிக்க மதிமுகவினருக்கு தார்மீக உரிமையில்லை.
இவர்களெல்லாம் சரியாக செயல்பட்டிருப்பார்களேயானால் நாங்கள் அரசியல் களத்திற்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை எனவும் மதிமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துவருகின்றனர்.