ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை இந்தியா பரிந்துரைத்ததா?
22 Sep,2018
ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்த்துக் கொள்ள இந்தியாதான் பரிந்துரை செய்தது என்று ஃபிரான்ஸின் முன்னாள் அதிபர் ஃபிரான்சுவா ஒலாந்த் தெரிவித்துள்ளது இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அவரின் கூற்றை அடுத்து ஃபிரான்ஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஃபிரான்ஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி கையெழுத்தான ரஃபேல் ஒப்பந்தத்தில் 36 ரஃபேல் விமானங்களை வழங்குவது மற்றும் அதன் தரம் ஆகியவை குறித்து மட்டுமே ஃபிரான்ஸ் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும், கூட்டு நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் ஃபிரான்ஸ் அரசாங்கத்துக்கு எந்த ஈடுபாடும் இல்லை என ஃபிரான்ஸ் தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்தியாவின் விதிப்படி, பொருத்தமான இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் ஃபிரான்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது; மேலும் இந்த நிறுவனங்களுடன் சேர்ந்து அவை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான திட்டத்தின் அனுமதியை ஃபிரான்ஸ் நிறுவனம் பெறும்."
"அதன்படி இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பல தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் ஃபிரான்ஸ் நிறுவனம் இடையே ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இந்தியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர்
"ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்த்துக் கொள்ளுமாறு இந்தியா பரிந்துரை செய்தது என்ற முன்னாள் ஃபிரான்ஸ் அதிபர் ஒலாந்தின் கூற்றை இந்தியா பரிசீலனை செய்து வருகிறது" என இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
"வணிக ரீதியான முடிவுகளில் இந்திய அரசோ அல்லது ஃபிரான்ஸ் அரசோ தலையிடவில்லை" என அவரது டிவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை வங்கி கணக்கு திவாலான ஒரு நிறுவனத்துக்கு பிரதமர் மோதி வழங்கியுள்ளது ஒலாந்தின் கூற்று மூலம் தெரியவந்துள்ளது. அவருக்கு நன்றி என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.