மாலத்தீவு விவகாரம் தொடர்பாக சுப்ரமணியன் சுவாமியின் கருத்து
26 Aug,2018
இலங்கை தலைநகர் கொழும்பில் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தை சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில், மாலத்தீவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் முறைகேடு நடைபெறலாம் என்று நஷீத் அச்சம் தெரிவித்தார். அண்டை நாடான மாலத்தீவில் தேர்தல் முறைகேடு நடப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு நடைபெற்றால், அந்நாட்டின் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும். மாலத்தீவு அதிபர் யாமீன், இந்தியர்களை அவமதிக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், சுசுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்துக்கும், இந்திய அரசுக்கும் தொடர்பில்லை. அது அவரது சொந்த கருத்தாகும்; என்றார்.
மாலத்தீவு அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்யும்படி, யாமீனுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாலத்தீவில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நெருக்கடி நிலையை அதிபர் யாமீன் பிரகடனம் செய்தார். இதைத் தொடர்ந்து, மாலத்தீவு- இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.