சூறாவளி மழைக்கு உ.பி., ராஜஸ்தானில் 42 பேர் பலி
16 Apr,2018
ஆக்ரா: கோடைகால சூறாவளி மழைக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலத்த மழை
நாடு முழுவதும் தற்போது கோடைக் காலம் தொடங்கி விட்டதால் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. அதே நேரம் பரவலாக கோடை மழையும் பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியிலும், ராஜஸ்தானின் கிழக்கு பகுதியிலும் கடும் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்று பயங்கரமாக சுழன்று வீசியது. இதில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பரந்தன. சுவர்கள், பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, மதுரா உள்ளிட்ட பகுதிகளில் காற்று வீசியதில் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.
200 பேர் காயம்...
ஆக்ராவில் தாஜ்மகாலின் நுழைவு வாயில் கட்டிடத்தின் ஸ்தூபி இடிந்து விழுந்தது. இதே போல் ஆக்ரா கோட்டை சுவர்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. இவற்றை சரி செய்யும் பணியில் தொல்லியல் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 42 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் தூங்கி கொண்டிருந்த போது சூறாவளியுடன் மழை பெய்ததால் சேதம் அதிகம் ஏற்பட்டது. 200 பேர் வரை காயமடைந்தனர்.
தலா 4 பேர் பலி...
மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மழைக்கு ஆக்ராவில் மட்டும் 14 பேர் பலியானார்கள். மதுரா, பைரோசாபாத்தில் தலா 4 பேர் பலியானார்கள். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மதுரா, ஆக்ராவை கடந்து செல்லும் ரயில்கள் மெதுவாக சென்றன. ரயில் தண்டவாளங்களில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் 4 மணி நேரம் வரை ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.