2 ஆயிரம் தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை அட்டூழியம்
08 Apr,2018
:
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச்செல்லும் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்சினைக்குஉரிய தீர்வு காணவேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு பல முறை இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளது. இருப்பினும் தாக்குதல் மட்டும் நின்றபாடில்லை.
இந்த நிலையில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் 434 விசைப்படகுகளில் நேற்றிரவு மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடலோரக் காவல் படையினரின் ரோந்துப் படகுகள் அங்கு வந்தன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 20 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து நாசப்படுத்தி, தமிழக மீனவர்கள் அனைவரையும் எச்சரித்து விரட்டியடித்தனர்.
கடந்த மூன்றாம் தேதியன்றும் இதேபோல் சுமார் 2500 மீனவர்களை இலங்கை கடலோரக் காவல் படையினர் விரட்டியடித்தது நினைவிருக்கலாம்