என்கவுன்டருக்கு பயந்து போலீசில் சரண் அடையும் ரவுடிகள்!
03 Apr,2018
உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் பலர் காவல்நிலையங்களில் சரணடைந்து வருகின்றனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பெற்ற நாள் முதல் ரவுடிகள், மற்றும் கிரிமினல்கள் மீதான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இம்மாநிலத்தில் கடந்த மார்ச் 2017-ம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ம் ஆண்டு 1144 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில் 34 கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், 2744 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இதில் பல என்கவுன்டர்கள் போலி என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் கடுமையான குற்றங்களை செய்துவரும் ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்து வருவதை அறிந்த குற்றவாளிகள் போலீஸ் நிலையங்களில் சரணடைந்து வரத்துங்கியுள்ளனர். மேலும் தங்களது ஜாமீன் கோரிக்கையையும் நிராகரித்து வருகின்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் இந்தரஜித் சிங் கூறுகையில், ”லாஹபூர் போலீஸ் நிலையத்தில் 20 வழக்குகளில் தொடர்புடைய ரஞ்ஜித் என்ற ரவுடி ஜாமினில் உள்ளார். இவர் கடந்த ஒரு மாத காலமாகவே லாஹபூர் போலீஸ் நிலையத்தில் தான் உறங்குகிறார். இவரை தவிர மேலும் அன்கீத், ஷ்யாமு சிபஹி போன்ற ரவுடிகள் இரவு வேளைகளில் போலீஸ் நிலையங்களிலேயே உறங்குகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது குற்ற செயல்களில் இருந்து வெளியேறி விட்டார்கள். மாநிலத்தில் நடைபெறும் எந்தவொரு குற்ற வழக்குகளிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை எனறார்.