ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது..
20 Mar,2018
வங்கிகளில் பெரிய பெரிய தொழில் அதிபர்கள் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் சம்பவம் மக்களிடையே கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வங்கிகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வங்கியையே சூறையாடுவது போல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே ஐ.பி.எல். முன்னாள் சேர்மன் லலித்மோடி, தொழில் அதிபர் விஜய் மல்லையா ஆகியோர் பல ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறார்கள்.
சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரிகள் நிரவ்மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோர் ரூ.12,000 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.
வங்கி மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிரவ்மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட வங்கி ஊழியர்களும், உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் முழு அளவிலான தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மோசடிகளும், கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருவதும் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பரேக் அல்லுமினிக்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனம் ஸ்டேட் வங்கியிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆக்ஸிஸ் வங்கியில் நடந்த இந்த ரூ.4,000 கோடி மோசடி வெளியாகி உள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியில் பரேக் அல்லுமினிஸ் லிட் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் பெயரில் போலி பில்கள் மற்றும் போலியான சிபாரிசு கடிதங்கள் தயாரித்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளது.
அந்த நிறுவனங்கள் அனைத்தும் போலியானவை என்றும் பண பரிமாற்றம் செய்யப்பட்ட பல வங்கி கணக்குகள் பரேக் அலுமினிஸ் லிட் நிறுவன இயக்குனர்களின் தனிப்பட்ட சொந்த கணக்குகள் என்றும் தெரிய வந்தது. இவ்வாறு பல்வேறு பெயர்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. மொத்தம் ரூ.4,000 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கி சார்பில் சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டது. சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி பரேக் அல்லுமினிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் பவார்லால் பண்டாரி, பிரேமல் கோராகாந்தி, கமலேஷ் கானுங்கோ ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது நம்பிக்கை துரோகம், மோசடி, கிரிமினல் குற்றச்சதியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தவிர அதன் மற்ற இயக்குனர்களான அமிதாப் பரேக், ராஜேந்திர கோதி, தேவன்சு தேசாய், கிரன் பாரிக், விக்ரம் மோர் தானி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அமிதாப் பரேக் கடந்த 2013-ம் ஆண்டு இறந்து விட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதலே இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. வங்கி அதிகாரிகள் சிலரது உடந்தையால் மோசடி விவரம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டு வந்தது. மோசடி பணத்தை அந்த நிறுவனம் பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு திருப்பி விட்டுள்ளது.
தற்போது மோசடி விவரம் வெளியானதைத் தொடர்ந்து திவால் நோட்டீஸ் கொடுக்கும் நடவடிக்கையில் அந்த தனியார் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக வங்கி அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கைதான இயக்குனர்கள் 3 பேரும்தான் போலி பில்களும், போலி சிபாரிசு கடிதங்களும் தயாரித்து இந்த மோசடியில் பெரும் பங்கு வகித்துள்ளனர். மற்ற இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் சி.பி.ஐ. இறங்கியுள்ளது.