குரங்கணி மலையில் நடந்தது என்ன? உயிர் தப்பிய திருப்பூர் வாலிபர் பரபரப்பு தகவல்..
14 Mar,2018
திருப்பூர் வி.ஜி.வி. கார்டனை சேர்ந்த யோகா பயிற்சியாளர் சக்திகலா, அவரது மகள்கள் பாவனா, சாதனா மற்றும் வெள்ளியம்காட்டை சேர்ந்த வாலிபர் ராஜசேகர் ஆகியோர் குரங்கணி தீவிபத்தில் சிக்கினர். இதில் சக்திகலா பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 பேரும் உயிர் தப்பினர்.
திருப்பூர் திரும்பிய ராஜசேகர் இந்த சம்பவம் பற்றி கூறியதாவது,
திருப்பூர், ஈரோடு, சென்னிமலை பகுதியை சேர்ந்த பேஸ்புக் நண்பர்கள் 12 பேர் ஒரு குழுவாக வேனில் குரங்கணிக்கு சென்றோம். கடந்த 10-ந்தேதி காலை குரங்கணியில் மலையேற ஆரம்பித்தோம். எங்களை ரஞ்சித் என்ற கைடு அழைத்து சென்றார். அன்று மாலை கொழுகு மலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் தங்கினோம்.
அந்த நேரத்தில் தான் இன்னொரு குழு மலையேற வந்தது தெரியவந்தது. மறுநாள் காலை உணவு சாப்பிட்டு மீண்டும் இறங்க ஆரம்பித்தோம். கொஞ்ச தூரம் வந்தபிறகு காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. புகைமூட்டமும் காணப்பட்டது.
ஒத்தமரம் என்ற இடத்திற்கு 2.30 மணியளவில் வந்தோம். அப்போது தான் காட்டுத்தீ ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சீக்கிரம் தீ பரவியது. தீயின் எதிர் திசையை நோக்கி எங்களை கைடு அழைத்து சென்றார். அப்போது பதட்டம் ஏற்பட்டதால் எங்களுடன் வந்தவர்களை தவற விட்டு விட்டோம். அவர்கள் பின்னால் வந்து கொண்டிருப்பதாக கருதினோம். தீயில் இருந்து தப்பிக்க வேகமாக சென்றதால் பாறைகளில் மோதி கீழே விழுந்து சில காயங்கள் ஏற்பட்டது. எங்களுடன் இருந்த குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்தோம். காட்டுத்தீ ஏற்பட்டது தெரிவதற்கு சில நிமிடம் முன்வரை சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருந்தோம்.
எதிர்பாராமல் வந்த தீ அனைத்தையும் இழக்க செய்தது. தீயால் நண்பர்களை இழந்துவிட்டோம். காட்டு தீ ஏற்பட்டு இருப்பதை தெரிந்ததும் கைடு காட்டிய வழியை எல்லோராலும் பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. பதட்டத்தில் பிரிந்து விட்டோம். நானும் நேகா என்ற குழந்தையும் மலையில் இருந்து கீழே இறங்கி முதலில் வந்தோம். எங்களை தொடர்ந்து 6 பேர் வந்தனர். கண்முன் நடந்த இந்த கோர சம்பவத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.