ஏமாந்து போன திருடர்களால், ஏரியில் கிடந்த தங்க சிலைகள்
07 Feb,2018
..
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சேந்தமங்கலத்தில் ஏரி உள்ளது. இங்குள்ள தண்ணீரில் தங்கத்திலான சாமி சிலைகள் கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது.
இதனை அறிந்த பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர், தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தண்ணீரில் இருந்த 11 சாமி சிலைகளை மீட்டனர். அதனை சோதனை செய்த போது தங்க நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட சிலை என்பது தெரிந்தது.
இதில் அதிக அளவில் அம்மன் சிலைகள் இருந்தன. பெரும்பாலான சிலைகள் உடைந்து சேதம் அடைந்து இருந்தது.
தங்க சிலைகள் என்று நினைத்து மர்ம கும்பல் கொள்ளையடித்து வந்து இருக்கலாம் எனவும், அவை சிமெண்ட் சிலைகள் என்பது தெரிந்ததும் அதனை ஏரியில் வீசி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் மாயமாகி உள்ளதா என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் தாசில்தார் அலு வலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. தங்க சிலை கிடப்பதாக பரவிய தகவலால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.