சென்னையைச் சேர்ந்த இளம்பெண், கிழக்கு கடற்கரைச் சாலையில் பிணமாகக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையான கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீனவ கிராமம் ஆலமரக்கோட்டை.
இந்தப் பகுதியின் கடற்கரை மணலில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்ததைப் பார்த்த மக்கள், சூணாம்பேடு போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இளம்பெண்ணின் உடலை மீட்டனர். அதைத் தொடர்ந்து இளம்பெண் இறந்துகிடந்த இடத்தின் அருகே பேக் இருந்தது.
அதில், அழகு சாதனப் பொருள்கள், மாத்திரை, துணி, பணம், அடையாள அட்டை ஆகியவை இருந்தன. அடையாள அட்டையில் ஜாகிரா, சென்னை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், இறந்த இளம்பெண் ஜாகிராவாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்தப் பெண் எப்படி இறந்தார், எதற்காக இந்தப் பகுதிக்கு வந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் இளம்பெண், கடற்கரை மணலில் கடுமையாக உயிருக்குப்போராடியதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. மேலும், இளம்பெண் இறந்து கிடந்த இடத்தின் அருகில் ஆண்களின் காலணி பதிந்த தடயங்கள் காணப்படுகின்றன.
இதனால் இளம்பெண்ணை யாராவது பாலியல் வன்கொடுமை செய்தார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில்தான் அது பற்றி உறுதிப்படுத்த முடியும்.
இளம்பெண்ணின் உடைகள் களையப்படவில்லை. இதனால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே போலீஸார் கருதுகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஆலமரக்கோட்டைப் பகுதியில் அடிக்கடி சினிமா சூட்டிங் நடக்கும். சினிமா சூட்டிங் வந்த இடத்தில் இளம் பெண்ணுக்கு ஏதாவது நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
குடியிருப்பின் அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். மேலும் அந்த இளம்பெண்ணின் முகத்தில் காயங்களும் இருக்கின்றன” என்றனர்.