சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது
17 Nov,2017
சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994ம் ஆண்டு லண்டனில் இருந்து, ‘லெக்சஸ்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.
இதில், ரூ.1.06 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன், அவரின் உறவினர் வி.என்.பாஸ்கரன், லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி மேலாளர் சுஸ்ரிதா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கடந்த 2010-ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
இந்த தண்டனையை எதிர்த்து நடராஜன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் நடராஜனுக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது.
சமீபத்தில் தான் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.