சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில், ‘ஸ்கிம்மர்’ எனப்படும் கார்டை டூப்ளிகேட் எடுத்து பணமோசடி செய்யும் கருவியைப் பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடி, பணம் கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது. ஸ்கிம்மர் கருவியைப் பொருத்திய மர்ம ஆசாமிகளை போலீஸார் தேடிவருகிறார்கள்.
சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்பச் சென்ற வங்கி ஊழியர்கள், அந்த மையத்தின் ‘ஸ்வைப்’ செய்யும் கருவியுடன், ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஸ்கிம்மர் கருவியை இணைத்து, ரகசிய எண் (PIN) பதிவு செய்யும் இடத்தில் சிறிய கேமராவையும் மர்ம நபர்கள் பொருத்தியிருந்தனர். இதன்மூலம் வாடிக்கையாளரின் தகவல்களைத் திருடி ஏ.டி.எம்., கார்டுகளை க்ளோனிங் செய்து, பணத்தைத் திருட முயற்சி மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்த கனரா வங்கி மேலாளர், ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய எண்ணை அறிந்து கொள்வதற்காக பொருத்தப்பட்டிருந்த கேமராவைப் பறிமுதல்செய்து, குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார், ஏ.டி.எம்.,மில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்திய மர்ம நபர்கள் யார் என்பதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்கிம்மர் பொருத்தப்பட்டிருந்த ஏ.டி.எம் மையத்திலிருந்த மூன்று கண்காணிப்புக் கேமராக்களிலும் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவை பழுதடைந்திருப்பது தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்கு பாதுகாவலர்களும் இல்லாததால், ஸ்கிம்மர் பொருத்திய, மர்ம நபர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் ஏதும் திருடப்பட்டுள்ளதா என்பது பற்றியும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி கூறுகையில், சாதாரணமாக ஒருவர் அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும்போது, அருகில் உள்ள பகுதியில் ஏதாவதொரு வாகனத்தில் நின்றுகொண்டு, அவர்களின் கார்டு பற்றிய விவரங்களை குற்றவாளிகள் பதிவுசெய்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுவரை, அந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் யாரும் தங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதாக புகார் அளிக்கவில்லை. எனவே, பொதுமக்கள், ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும்போது சந்தேகப்படும்படியான பொருள்கள் ஏதும் ஸ்வைப் செய்யப்படும் பகுதியில் உள்ளதா என்பதை கவனத்துடன் பார்க்க வேண்டும். அப்படி ஏதும் இருப்பின், உடனடியாக வங்கியில் உள்ள தங்களின் கணக்கு தொடர்பான பாஸ்வேர்டு மற்றும் ரகசிய குறியீட்டு எண்களை வாடிக்கையாளர்கள் உடனடியாக மாற்ற வேண்டும். மேலும், வங்கி அதிகாரிகளுக்கோ, காவல்துறையினருக்கோ புகார் அளிக்க வேண்டும்” என்றார்.
இந்தக் கருவி ஒருவாரத்துக்குள்ளாகவே அந்த மையத்தில் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த முறை இந்த மையத்தில் பணம் நிரப்ப வந்தபோது, தனியார் பணம் நிரப்பும் நிறுவனத்தினர் இந்த ஸ்கிம்மர் கருவியை பார்க்கவில்லை. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள 12-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். இதன்மூலம் குற்றவாளிகள் யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்றதொரு ஏ.டி.எம். மோசடி, சென்னை புறநகர்ப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அப்போது, வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
2014-ம் ஆண்டு கிண்டியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆறு பேரையும், கிரெடிட் கார்டு மோசடி செய்த இலங்கையைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அப்போது, இவர்கள் ஸ்கிம்மர் உதவியுடன் 15 லட்சம் ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கிண்டி பகுதியில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தியதாக, ருமேனியாவைச் சேர்ந்த ஒருவரை சென்னை காவல்துறையினர் கடந்த ஆண்டு கைதுசெய்தனர்.
எனவே, நம் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்றாலும், மிகுந்த கண்காணிப்புடன் செயல்படுவது அவசியம். படித்தவர்களுக்கே இதுபோன்ற கருவிகள் பற்றி விழிப்பு உணர்வு இல்லாத சூழ்நிலையில், டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் செல்லும்போது, பாமர மக்கள் மற்றும் சாமான்ய மக்கள், வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இதுபோன்ற மோசடி பாதிப்புகளைக் களைய அனைத்து தரப்பினருக்கும் வங்கி அதிகாரிகளும், போலீஸாரும் விரிவான விளக்கங்களை அளிக்க முன் வரவேண்டும்.
‘ஸ்கிம்மர்’ மூலம் பணம் எப்படி திருடப்படுகிறது?
ஸ்கிம்மர்ஸ்கிம்மர் கருவி மூலம் மோசடி எப்படி நடைபெறுகிறது என்பது பற்றி சென்னை மாநகர சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களில் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த நீங்கள் கொடுக்கும் கார்டை electronic data capture இயந்திரத்தில் ‘ஸ்வைப்’ செய்வார்கள். அப்போது, ஸ்வைப் செய்யப்படும் கார்டில் உள்ள தகவல்கள், அந்த இயந்திரம் மூலமாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனையைத் தொடங்கலாமா என்பதை முடிவு செய்யும். அந்த இயந்திரம் போலவே கார்டில் உள்ள தகவல்களைப் பிரதியெடுக்கும் இன்னொரு இயந்திரம் இருக்கிறது. இதுவே Skimmer எனப்படுகிறது. கார்டை ஸ்வைப் செய்யக் கொடுத்துவிட்டு அதனைக் கவனிக்காமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், மறைவிடத்தில் இருக்கும் ஸ்கிம்மர் இயந்திரத்தில் ஒருமுறை உங்கள் கார்டைத் தேய்த்துவிட்டால், தேவையான தகவல்களை அந்த இயந்திரம் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளும். ஒரு ‘ஸ்கிம்மர்’ கருவியில் 100 கார்டுகளின் தகவல்களைப் பதிந்து கொள்ளமுடியும். பிறகு, அந்தத் தகவல்களை வைத்து டம்மி கார்டு (க்ளோனிங்) தயாரித்து, ரகசியக் குறியீட்டு எண்ணை ஹேக் செய்தோ அல்லது ரகசியக் கேமிராவில் பதிவு செய்ததன் அடிப்படையிலோ, அதனையும் பயன்படுத்தி, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள்.
மேலும், சில நபர்களை தங்களின் கைகூலியாக வைத்துக்கொண்டு அவர்கள் மூலம், கார்டு உரிமையாளர் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த டூப்ளிகேட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாத நிலையில், ஆன்லைன் வர்த்தகம் மூலம் மோசடி செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. மாதாந்திர வங்கி ஸ்டேட்மென்ட் மூலமாகவோ அல்லது அக்கவுன்டில் பணம் குறைவதை உணரும்போதோதான், இந்த மோசடியை கார்டுக்குச் சொந்தக்காரர் உணரமுடியும். எனவே, உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டை மற்றவர்களிடம் கொடுக்கும்போதும், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போதும் மிகவும் உஷாராக இருங்கள்!” என்றார்.
எனவே, ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்றால், மிகுந்த கண்காணிப்புடன் உங்கள் கார்டை உபயோகியுங்கள். அவ்வப்போது, ரகசியக் குறியீட்டு எண்ணை (PIN) மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்வதை உறுதியுடன் தவிர்க்கலாம்.