15 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு உரிமையாளராக இருந்த கேசவலு ஜமீனின் வாரிசு தனது இறுதிக் காலத்தில் சொந்த வீடு கூட இல்லாமல் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தருமபுரியை அடுத்துள்ள மிட்டாநூல அள்ளி ஜமீன்தாராக வாழ்ந்தவர் கேசவலு ஜமீன்.
1735-ம் ஆண்டு முதல் கேசவலு ஜமீன் வம்சம் அதிகாரபூர்வமாக வாழ்ந்து வந்ததற்கான ஆவணங்கள் இன்றும் உள்ளன.
கேசவலு, ஜமீனாக இருந்தபோதே 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை அவர்கள் காலத்தில் நிர்வகித்துவந்துள்ளார்.
ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஜமீன்தார் முறை ஒழிப்பு நடவடிக்கையால், இவர்களிடம் இருந்த 2 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது.
இதனால் மனமுடைந்த கேசவலு குடும்பத்துடன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.
காலங்கள் உருண்டோடி, மீண்டும் கேசவலு ஜமீனின் வாரிசான சந்தானம் நாயுடு தருமபுரியில் குடியேறினார்.
புகைப்படத் தொழில் செய்துவந்த தனது இரண்டு மகன்கள் செல்வம், ரவி மற்றும் மகள் சாந்தி ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்
இந்நிலையில் ஜமீன் குடும்பத்துக்கு இந்திய அரசு வழங்கும் சலுகையை பெற சந்தானம் முயன்றுள்ளார்.
இது தொடர்பான ஆவணங்களை அவர் சேகரிக்க, ஜமீனுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலங்களில் இன்னமும் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தவில்லை என்ற விவரத்தை அறிந்துள்ளார்.
இது தொடர்பான ஆவணங்களை காட்டி தனக்கு பட்டா வழங்கும்படி தருமபுரி மாவட்ட நிர்வாகத்தை சந்தானம் அனுகியுள்ளார்.
அவர் கேட்ட 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தற்போது கிராமங்களாக மாறிவிட்டதால் மாவட்ட நிர்வாகம் அதை கொடுக்காமல் தாமதம் செய்து வந்துள்ளது.
இந்நிலையில் சந்தானம் நாயுடு 84 வயது வரை நிலத்துக்காகப் போராடி, தனது கடைசிக் காலத்தில் சொந்த வீடு கூட இல்லாமல் கடந்த 5-ஆம் திகதி உயிரிழந்தார்.
கேசவலு ஜமீன்தார் வாழ்ந்த காலத்தில், 15 கோயில்களுக்கு பராமரிப்பு மற்றும் பூஜை செலவுகளுக்கு 700 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார்.
அந்த கொடை வள்ளலின் வாரிசு இன்று சொந்த வீடு கூட இல்லாமல் இறந்துள்ளது அப்பகுதியினரை வருத்தமடைய செய்துள்ளது.
இது குறித்து பேசிய சந்தானத்தின் மகன் செல்வம், 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசிடம் கேட்கவில்லை.
ஜமீன் வம்சத்துக்கு இந்திய அரசு வழங்கியுள்ள சலுகைகளை வழங்கினாலே எங்களுக்கு போதும் என வேதனையோடு கூறியுள்ளார்.