பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலங்களில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் நுழையத் தடை
16 Sep,2017
பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் புறத்தின் வழியே ரோஹிங்கியா முஸ்லிம்கள் நுழைவதைத் தடுக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து எல்லையில் நுழையும் ரோஹிங்கியா முஸ்லிம்களைத் தடுப்பதற்காக அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி தனது நிலைப்பாட்டை மத்திய அரசு இன்னும் உறுதியாக தெரியப்படுத்தாத நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநில முதல்வர் சர்பனந்தா சோனோவால் “எல்லையோர பாதுகாப்புப் படையினர், தலைமை அதிகாரிகளுக்கு அசாம் எல்லைக்குள் ஊடுருவும் ரோஹிங்கியா முஸ்லிம்களை திருப்பி அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரன் சிங்கும் இதே மாதிரியான உத்தரவை அம் மாநில உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் தீவிரவாதிகளும் ஊடுருவ நிறைய வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியன்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து வருகின்றன. இதனால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 3 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்துக்கு அகதிகளாக இடப்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.