மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!
21 Nov,2021
மலச்சிக்கல் மனிதனுக்கு பெரும் சிக்கல்ஸ. இந்தச் சிக்கலை சிக்கல் ஏற்படுவதற்கு முன்பே தற்காத்துக்கொண்டால் மூலநோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். எவ்வாறு வாகனங்கள் இயங்க இன்ஜின் ஆயில் தேவைப்படுகிறதோ, அதேபோல் நம் உடல் இயங்குவதற்கும்லூப்ரிகன்ட் தேவை. இது குறையும்பட்சத்தில் நம் உடல் வறட்சியாகி, மலச்சிக்கல், மூலநோய் போன்ற பாதிப்புகள் உருவாகின்றன. சரியான உணவுப் பழக்கங்கள் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே மூலநோயை தவிர்க்கலாம்.
தற்போது நாம் கோடைகாலத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குளிர்காலத்தைவிட இப்போது நம் உடலின் தன்மை அதிகமாக கொதிநிலையில் இருக்கும் என்பதால் அதற்கேற்றார்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். விரைந்து செரிமானமாகும் உணவுகளை உண்டால் கூடுதல் நன்மையைத் தரும். சூட்டை உண்டாக்கும் உணவுகள், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, அதிக நேரம் வயிற்றைக் காயப்போடுவது, சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் இருப்பது போன்றவை பைல்ஸ்/மூலம் ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன.
பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளையும், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களையும் சாப்பிட்டால் மலம் இறுகாமல் தடுக்க நாம் எடுக்கும் முதன்மை நடவடிக்கைகளாகும். ஏனெனில் முதற்கட்டமாக ஏற்படும் மூலத்தை மட்டுமே நம்மால் தவிர்க்க முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை பைல்ஸ், பொதுவான சுகாதார பிரச்னையாக இருக்கிறது. சுமார் 40 கோடிக்கு மேற்பட்டோர் மூலநோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் மூலநோயை பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் இருப்பது பிரதானம். இல்லையெனில் நாளடைவில் பெரிதாகும் மூலநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உருவாகக்கூடும்.
அசுர வேகத்தில் மருத்துவத் துறையின் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் வளர்ச்சிப் பெற்று வருகின்றன. நம் கண் இமைக்கும் நேரத்தில் சிகிச்சையை வலியின்றி செய்து முடிக்கும் அளவிற்கு அனுபவிக்க மருத்துவர்களும் உள்ளனர். அதனால் அறுவை சிகிச்சை என்றவுடன் மூலநோய் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது இவ்வாறான நோய்களை எளிமையாக லேசர் சிகிச்சை மூலமாகவே குணப்படுத்திவிடுகின்றனர். இதனால் கத்தியில்லாமல், இரத்தம் சிந்தாமல் விரைவில் நோயில் இருந்து நம்மால் விடுபட்டுவிட முடிகிறது. சிகிச்சைக்குப் பிறகு நமது உணவுப் பழக்கங்களில் சில மாற்றங்கள் செய்தும், மருத்துவரின் அறிவுரைப்படியும் நடந்துகொண்டால் மூலநோய் திரும்பி வருவதற்கான வாய்ப்பே இருக்காது.