எட்டாம் வகுப்பு படிக்கும் மகனை பள்ளி முடிந்தவுடன், சாயங்காலம்,டென்னிஸ் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் அப்பா. பள்ளியில் நடந்தவற்றை தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், ‘நேற்றைக்கு பிராக்டீஸ் பண்ணினப்ப தலை சுத்திடுச்சுஸ அப்படியே உட்கார்ந்துட்டேன்பா’ என்றான்.
‘மதிய சாப்பாட்டுக்கு பின் எதுவுமே சாப்பிடாம சாயங்காலம் வரைக்கும் இருந்தா, பசியில் அப்படித் தான் இருக்கும்ஸ’ என்றார் அப்பா.
பரிசோதனை
பயிற்சி மைதானத்தில் விட்டபின், சற்று துாரத்தில் இருந்த பெஞ்சில் காத்திருந்தார். அரை மணி நேரத்தில், பயிற்சியாளர் பதற்றத்துடன் அருகில் வந்து, ‘உங்க பையன் தலை சுற்றி மயக்கமாயிட்டான்’ என்றதும், பதற்றத்துடன் ஓடினார்.
உடனடியாக அருகில் இருந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அடிப்படையான சில கேள்விகளிலேயே, பையனுக்கு, ‘வெர்டிகோ’ பிரச்னை இருக்கலாம் என்று, தெளிவாக அவரால் ஊகிக்க முடிந்தது.
மறுநாள் என்னிடம் வந்தனர். ‘வெர்டிகோ’ என்பது தலைசுற்றல்; உலகமே சுற்றுவது போல இருக்கும். மதுப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு உட்பட பல உடல் பிரச்னைகள் இருப்பவர்களும், சமயங்களில், ‘தலை சுற்றுகிறது’ என்று சொல்லுவர்.
ஆனால், அவர்களுக்கு வருவது, தலை சுற்றல் இல்லை; பல காரணங்களால் ஏற்படும் மயக்கம். நோயாளி சொல்லுவதை வைத்து, மயக்கமா, தலை சுற்றலா என்பதை, டாக்டரால் தான் முடிவு செய்ய முடியும். எதனால் என்பதை உறுதி செய்வதற்கு, சில பரிசோதனைகள் உள்ளன.
நாம் நடக்கும் போது, நம் உடலை சம நிலையில் வைப்பதற்காக, இரு காதுகளிலும், உள் காதுப் பகுதி யில், திரவம் உண்டு. இது எந்த நேரத்திலும் வற்றாது. இந்த திரவம், நாம் தலையை அசைப்பதற்கேற்ப இடம் நகரும்.
இந்த திரவம் வழக்கத்திற்கு மாறாக, சுற்றினால், தலை சுற்றல் ஏற்படும்.
குறிப்பிட்ட வேகத்தில், ‘சீட் பெல்ட்’ போடாமல், காரில் போகும்போது, எதிர்பாராமல், ‘பிரேக்’ போட்டால், மணிக்கணக்கில் ஒரே நிலையில் வேலை செய்து, சட்டென அந்த நிலையில் இருந்து மாறினால், பல மணி நேரம் கம்ப்யூட்டர் திரையையே பார்த்து, திடீரென் எழுந்திருக்கும் போது, நிமிர்ந்தே ஒட்டடை அடித்தவிட்டு, குனியும் போது என, ஒரு நிலையில் இருந்து, இன்னொரு நிலைக்கு மாறும் போது, இந்த திரவம் எதிர் திசையில் சுற்றுவதால், தலை சுற்றுகிறது.
எந்த சூழ்நிலையில் தலைசுற்றல் வருகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப சில பயிற்சிகளை தருவோம். குறுகிய காலத்திற்கு மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும். ஐ.டி., துறையில் வேலை செய்பவர்களுக்கு, தலைசுற்றல் பிரச்னை வருகிறது.
சிறப்பு வகுப்பு
‘டிவி’ பார்ப்பது, புத்தகம் படிப்பது, மொபைல் போன் பயன்படுத்துவது என்று எதையும் படுத்தபடி செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், தலைசுற்றல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கழுத்திற்கு அதிக வேலை தருவது, தலையில் அடிபடுவது, காதில் ஏற்படும் தொற்றால் பாதிக்கப்படுவதும், ‘வெர்டிகோ’ ஏற்பட வழி வகுக்கும். பிரச்னை இருப்பது தெரிந்தால், எந்த சூழலில் இது வருகிறது என்பதை உறுதி செய்து, தேவையான பயிற்சி மற்றும் மருந்துகளை தவறாமல் குழந்தைக்கு தர வேண்டும்.
டாக்டரின் ஆலோசனைப்படி, நீச்சல் தவிர, மற்ற விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பலாம். பயிற்சியின் போது, தலைசுற்றல் வந்தால், பதறாமல், அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தால், சில வினாடிகளில் சரியாகி விடும்.
குழந்தைகளுக்கு, ‘வெர்டிகோ’ பிரச்னை இருப்பது தெரிந்தால், பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிறப்பு வகுப்புகளுக்கோ, ஏன் பள்ளிக்கு அனுப்பினாலும், நாள் முழுவதும் என்ன ஆகுமோ என்று பயப்படுகின்றனர்.
விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். இது தேவை இல்லாதது.
பிரச்னையை புரிந்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் போதும். ஆபத்தான பிரச்னை இல்லை இது. முறையான மருத்துவ ஆலோசனையை பின்பற்றினால் போதும்; இயல்பாக இருக்கலாம்