பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மகளும், ‘கேதார்நாத்’ திரைப்படத்தின் நாயகியுமான சாரா அலிகான், தனக்கு `பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருந்ததாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே, அவருக்கு உடல் எடை வேகமாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சாரா மட்டுமல்ல, இந்தியாவில் வருடத்துக்கு பத்து லட்சம் பெண்கள், `சினைப்பை நீர்க்கட்டி’ எனப்படும் பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்.
‘குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வராதது, அதிக நாள்கள் ரத்தப்போக்கு இருப்பது, அளவுக்கதிகமான அல்லது மிகக்குறைவான அளவே ரத்தப்போக்கு, மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி ஏற்படுவது என்று பெண்களுக்கு மாதவிடாயில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இப்படியான சிக்கல்கள் நமக்குச் சொல்லவரும் செய்தி, ‘குறிப்பிட்ட அந்த உடலில் ஹார்மோன் குறைபாடுகள் இருக்கின்றன’ என்பதுதான். சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
ஒரு வகையில், இது எச்சரிக்கையும்கூட. ஆனால், `அலட்சியமாகப் பிரச்னையை கவனிக்காமல் விட்டுவிட்டால், வருங்காலத்தில் கருத்தரித்தலில் தொடங்கி, புற்றுநோய்வரையிலான பல பாதிப்புகள் ஏற்படலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து, போதிய விழிப்புஉணர்வு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை செல்லாமல், உரிய சிகிச்சையும் பெறாமல் தங்களுடைய உடல்நிலையை, மேலும் மேலும் கெடுத்துக்கொள்கிறார்கள். சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன, எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதை கவனிக்காமல்விடும்பட்சத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும், இதற்கான முறையான சிகிச்சைகள் என்னென்ன?
மகளிர் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி விளக்கமாகப் பேசுகிறார்.
“சினைப்பை நீர்க்கட்டிக்கான அடிப்படைக் காரணம், ஹார்மோன் சமச்சீரின்மைதான். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 11.6 கோடி பெண்கள், ஹார்மோன் சமச்சீரின்மையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சராசரியாக எத்தனை பேருக்கு ஹார்மோன் சமச்சீரின்மை இருக்கிறது என்பதைக் கண்டறிய, மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் (Metropolis Healthcare Ltd) என்ற அமைப்பு கடந்த வருடம் ஆய்வு ஒன்றைச் செய்தது. 18 மாதங்களாக நடந்த ஆய்வு முடிவில் 27,000-க்கும் மேற்பட்டோரின் ஹார்மோன்கள் பரிசோதிக்கப்பட்டன. அவர்களில், 17.60 சதவிகிதப் பெண்கள், ஹார்மோன் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. பரிசோதனைகள் மூலம், ‘சினைப்பை நீர்க்கட்டி’ என உறுதி செய்யப்படுபவர்களில், பத்தில் ஆறு பேர் டீன் ஏஜ் பெண்கள். `70 சதவிகிதப் பெண்களுக்கு, தங்களுக்கு பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருப்பதே தெரிவதில்லை’ என்கிறது அமெரிக்க தேசிய மருத்துவ அமைப்பு. முதல்நிலையிலேயே சிகிச்சைகளையும், தடுப்பு முறைகளையும் பின்பற்றத் தொடங்கிவிட்டால், பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
அறிகுறிகள்
பி.சி.ஓ.எஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தெரியும். வயதைப் பொறுத்தும், பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தும் இவை அமையும்.
* முகம், மார்பு ஆகிய பகுதிகளில் முடி வளர்ச்சி காணப்படுவது
* தீவிரமான முடி உதிர்தல் பிரச்னை
* சருமம் மற்றும் முடி சார்ந்த ஒவ்வாமைகள் ஏற்படுவது
* உடல் எடை அதிகரித்துக்கொண்டே போவது
* கர்ப்பப்பை விரிந்து அதில் சிறிது சிறிதாக நிறைய கட்டிகள் இருப்பது
* ஒழுங்கற்ற மாதவிடாய்
* கர்ப்பமாவதில் சிக்கல் உண்டாவது.
இவற்றோடு, உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தீவிரமான மனஅழுத்தமும் ஏற்படும்.
கவனிக்கத் தவறினால் ஏற்படும் பிரச்னைகள்
* 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுக்கூடும். கர்ப்பமானாலும், கரு கலைந்துவிட வாய்ப்பிருக்கிறது.
* பி.சி.ஓ.எஸ் பிரச்னை இருந்தால், உடலில் இன்சுலின் சுரக்கும் தன்மையில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களைவிட, கர்ப்பிணிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* 30 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதயப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
* 40 வயதைத் தாண்டிய பெண் என்றால் சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள், உடலில் கெட்ட கொழுப்புச்சத்து அதிகமாவது, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
* பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் புரோஜெஸ்ட்ரான் (Progesterone) ஹார்மோன் சுரக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக, ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். நாட்பட, கர்ப்பப்பை பாதிப்பும் சேர்ந்துகொள்ளும். இது, கர்ப்பப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
* 14 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்களே இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், தொடக்கநிலையிலேயே சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவிடுகிறார்கள். 14 வயதிலிருக்கும் பெண்களுக்கு, பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதீத ரத்தப்போக்குதான் அறிகுறிகளாக இருக்கும். எனவே, உடனே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.